கருணா, கேபிக்கு ராஜபோகமா?


கருணா போன்ற விடுதலைப் புலிகளின் தளபதிகளை பாதுகாத்து அவர்களுக்காக வக்காலத்து வாங்கும் அரசு, மறுபுறம் மரண தண்டணை நிறைவேற்றப்பட்ட இராணுவத்துக்கு பொது மன்னிப்பளித்த அரசு 15 வருடங்களுக்கு மேலாக சிறையில் வாடும்  அரசியல் கைதிகளை தொடர்ந்தும் கால இழுத்தடிப்பு செய்யாமல் விடுதலை செய்ய வேண்டுமென சுரேஸ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு கருணா கூட்டத்தில் பேசுகின்ற பொழுது தான் கொரோனா வைரைஸிலும் விட பயங்கரமானவன் என்றும் ஆனையிறவு படைமுகாம் தாக்குதலில் 3000 ற்கும் மேற்பட்ட இராணுவத்தினரை கொலை செய்ததாகவும் பெருமை பேசிக் கொண்டார்.

உடனடியாகவே எதிர்க்கட்சிகள் மற்றும் சிங்கள பௌத்த இனவாதக் குழுக்கள் கருணாவின் பெருமை மிகு கருத்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தத் தொடங்கினர்.
சஜித் பிரேமதாஸ உட்பட்ட மக்கள் சக்தி பிரபலங்கள் ஜே.வி.பியினர் இராவண பலய போன்ற பல பேர் இது தொடர்பான கண்டனங்களைத் தெரிவித்து 
கருணாவை கைது செய்யுமாறு கோரினர்.
ஆனால் ஆளும் கட்சியினர் அவருக்காக வக்காலத்து வாங்கினர். கருணாவின் தகவல்களைக் கொண்டே புலிகளை அழித்ததாகவும் அவர் காப்பாற்றப்பட வேண்டியவர் எனவும் ஆளும் தரப்பில் இருக்கக் கூடிய பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.
கருணாவின் வரலாறு இரகசியமானதல்ல என்று பிரதமரும் எதிர் கட்சியினருக்கு பதிலடி கொடுத்துள்ளார். ஏற்கனவே கருணா என்பவர் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவராகவும் பிரதி அமைச்சராகவும் மகிந்த தரப்பினரால் அழகுபார்க்கப்பட்டவர்தான். அது மாத்திரமல்ல விடுதலைப் புலிகளுக்குத் தேவையான ஆயுதங்களை கொள்வனவு செய்து வந்த கே.பி. என்பவருக்கும் தேவைக்கு மேலதிகமாக சலுகைகள் அனைத்தும் வழங்கப்பட்டு அவரும் இன்றுவரை அரசினால் பராமரித்து வரப்படுகின்றார்.
தேவைக்கேற்ப நீதியை ஆட்சியாளர்களால் வாங்க முடியுமாக இருந்தால் சிறையில் இருக்கும் கைதிகளை விடுவிப்பதில் ஏன் தாமதம் காட்டுகின்றீர்கள்?; சிறையில் இருக்கும் அனைத்து அரசியல் கைதிகளும் 15 வருடத்துக்கு மேல் சிறையில் வாடுகின்றனர். இவர்கள் யாரும் தாமாக விரும்பி வன்முறையில் ஈடுபட்டவர்களல்ல. அவர்களை வழிநடத்தியவர்களில் உத்தரவுகளை செயற்படுத்தியவர்களே அவர்கள்.
இவ் அரசியல் கைதிகளை தொடர்ந்தும் கால இழுத்தடிப்பு செய்யாமல் விடுதலை செய்ய வேண்டுமென கோருகின்றோம் என சுரேஸ் பிறேமசந்திரன் தெரிவித்துள்ளார்.


No comments