இனவெறிக்கு எதிரான புதிய ஆணையகம் - போரிஸ் ஜோன்சன்

இங்கிலாந்திலும்  கடந்த சில தினங்களாக ஆயிரக்கணக்கான கறுப்பின மக்கள் கூடி பல்வேறு கண்டன போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் இது குறித்து கூறியதாவது:-

இனவெறியை கையாளுவதில் நாங்கள் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளோம் என்று சொல்வதால் எந்த பயனும் இல்லை. கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் உள்ளிட்ட பிற அனைத்து துறைகளிலும் சமத்துவமின்மையின் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து, அதனை கவனிக்க தனி ஆணையம் அமைக்க வேண்டிய தருணம் இது.

இந்த நாட்டைப் பற்றி அக்கறை கொண்ட எவரும், ஆயிரக்கணக்கான கறுப்பின மக்கள் நடத்தி வரும் போராட்டத்தை வெறுமனே புறக்கணித்து விட முடியாது.அதேசமயம், நாடாளுமன்ற சதுக்கத்தில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளையும், நினைவுச் சின்னங்களையும் குறி வைத்து தாக்குதல் நடத்தும் போக்கை சகித்துக் கொள்ள இயலாது.

எனவே, இதுபோன்ற நடவடிக்கைகளை கைவிட்டு, இந்த பிரச்சினைக்கான தீர்வு எது என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.தற்போது நிகழ்காலத்தைப் பற்றிதான் பேச வேண்டும். கடந்த காலத்தைப் பற்றி மீண்டும் நினைவுபடுத்துவதில் பயனில்லை என கூறினார்.

புதிய ஆணையம் அமைப்பது, அதன் வடிவமைப்பு, கால அட்டவணை உள்ளிட்ட பிற விவரங்களை போரிஸ் ஜான்சன் வெளியிடவில்லை. அதேசமயம், ஆணையம் அமைக்கும் பணியையும், அதன் உறுப்பினர்களை நியமிக்கும் பணியையும் அந்நாட்டின் சமத்துவத்துறை அமைச்சர் கெமி பேடெனோச் மேற்பார்வையிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments