மட்டக்களப்பில் பயமில்லை?


மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களில் கிணற்று நீர் திடீரென வற்றியதால் மக்கள் நேற்று (15) முதல் பெரும் பதற்றமடைந்த நிலையில், அது ஆபத்தான நிலை இல்லை என உரிய அதிகாரிகள் அறிவித்திருக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளை, களுவாஞ்சிக்குடி, கல்லாறு உட்பட்ட பல பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை கிணறுகள் திடீரென வற்றின. மேல் மட்டத்தில் நின்ற தண்ணீர் கீழிறங்கி அறவே இல்லாமல் போனது.
இதனால் ஏதாவது ஆபத்து ஏற்படும் என மக்கள் அஞ்சினர். ஆனால், இது ஆபத்து நிலைமை இல்லையென வளிமண்டலவியல் அதிகாரிகளும் இடர் முகாமைத்துவ அதிகாரிகளும் கொழும்பில் தெரிவித்தனர்.
வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி ஷானிக்கா திசாநாயக்க மற்றும் இடர் முகாமைத்துவ நிலைய அதிகாரி பிரதீப் கொடிப்பிலி ஆகியோரிடம் இதுபற்றி கேட்டபோது  இது சாதாரண காலநிலை மாற்றத்தால் வருவதாக நாங்கள் கருதுகிறோம். பூமியதிர்ச்சி எங்கும் ஏற்படவில்லை. கடலும் உள்வாங்கவில்லை. அதனால் சுனாமி ஆபத்தும் இல்லை. சில நாட்களுக்கு முன்னர் கூடுதலான தண்ணீர் வந்து கிணறுகள் நிறைந்தன என்றும் கேள்விப்பட்டோம். எனவே மக்கள் அச்சமடைய தேவையில்லை. –  என்று தெரிவித்தனர்.

No comments