பிறந்தது "கொரோனா" குழந்தை!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம் சோகவுரா என்ற கிராமத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு 'கொரோனா' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த பிரதமரின் வேண்டுகோளை ஏற்று நேற்று நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று (மார்ச் 23) உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம் சோகவுரா என்ற கிராமத்தில் அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்குப் பெற்றோரின் சம்மதத்துடன், குழந்தையின் மாமா நிதேஷ் திரிபாதி என்பவர் 'கொரோனா' என்று பெயர் சூட்டியுள்ளார்.

இதற்கான காரணத்தைக் கேட்டபோது, “கொரோனா வைரஸ் ஆபத்தானது என்பதில் சந்தேகம் இல்லை. அது ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொன்று வருகிறது. இருப்பினும், மக்களிடம் பல நல்ல பழக்கங்கள் ஏற்படுவதற்கு கொரோனா காரணமாக உள்ளது. கொரோனாவால் உலக மக்கள் ஒற்றுமையுடன் இருக்கின்றனர். இந்தக் குழந்தை மக்கள் ஒற்றுமையின் சின்னமாக, தீமைகளை எதிர்த்துப் போராடுபவளாக இருப்பார்” என்று பதில் அளித்துள்ளார்.

No comments