முதலில் நிவாரணம் வழங்கவேண்டும்:சுரேஸ்


ஊரடங்கு என்ற பெயரால் நாளாந்தம் கூலிவேலைக்குச் சென்று வாழ்க்கையைக் கொண்டு நடத்துபவர்களைக் கைது செய்து அடித்துத் துன்புறுத்துவதை நிறுத்தி
, அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நட்டத்தை ஈடுசெய்து, அவர்களின் வீடுகளுக்கே சென்று நிவாரணப் பொருட்களை வழங்கி அவர்கள் வெளியில் நடமாட வேண்டிய தேவை அற்ற சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் கடமை என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் இணைப்பேச்சாளருமான சுரேஷ். க.பிறேமச்சந்திரன் ஊடக அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையின் விபரம் வருமாறு:உலகத்தையே புரட்டிப்போட்டுக்கொண்டிருக்கும் கொள்ளை நோயான கொரோனா வைரஸ் இலங்கையையும் விட்டுவைக்கவில்லை. இலங்கை அரசாங்கம் ஆரம்பம் முதற்கொண்டு இதனைக் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறுபட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. உலகத்தில் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். உலகத்தில் உள்ள 185க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த நோயினால் பீடிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஐரோப்பிய அமெரிக்க நாடுகள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் இலங்கை மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக கொரோனா பாதிப்பால் இதுவரை யாரும் இறந்ததாக இல்லை. பலபேர் நோயினால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள். பலநூறுபேர் கண்காணிப்பிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். பலநூறுபேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதன் காரணமாக கொரோனா வைரஸ் தொற்று என்பது ஓரளவாவது கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அரசாங்கத்தினுடைய முன்னேற்பாடுகள் நடவடிக்கைகள் அனைத்தையும் நாம் முழுமனதுடன் வரவேற்கின்றோம்.

கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக நாடுமுழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளது. மக்களின் நடமாட்டம் பாரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. யாரும் எந்த வேலைகளுக்கும் போகமுடியாது. விவசாயிகள் தங்களுடைய உற்பத்திப் பொருட்களை விற்க முடியாத சூழ்நிலையும் கடற்தொழிலாளர்கள் கடலுணவை விற்க முடியாத சூழலும் நிலவுகிறது. அன்றாடம் கூலித்தொழில் செய்வோருக்கு எந்தவித வேலைவாய்ப்புகளும் அற்ற சூழல் நிலவுகிறது. இதனால் முழு இலங்கையிலும் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் ஒருவேளை உணவிற்கே அல்லலுறும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் உலர் உணவு கொடுப்பதாகக் கூறியும் இதுவரை எதுவும் நடைமுறைக்கு வரவில்லை.
வடமாகாண ஆளுநரும் யாழ் மாவட்ட அரச அதிபரும் அரசுடன் பேசியிருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சுடன் பேசியிருப்பதாகவும் மக்களுக்கு நிவாரணங்கள் கிடைக்கும் என்று கூறியபோதிலும் எதுவுமே நடைபெறவில்லை. பாதிக்கப்பட்ட மக்களின் பட்டியலை கிராம உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஊடாக பிரதேச செயலாளர்களிடம் கையளித்துள்ளதாக அறிகின்றோம். ஆனால் பிரதேச செயலாளர்களும் கையறுநிலையிலேயே உள்ளனர். கொரோனா வைரசால் ஏற்படும் உயிரிழப்பைவிட பட்டினியால் மரணம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆகவே கொரோனா வைரசிற்கு எதிரான அரசாங்கத்தின் போராட்டத்திற்கு மக்கள் முழுமையான ஆதரவைக் கொடுக்க வேண்டுமாக இருந்தால், வேலையற்ற, பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள மக்களுக்கு அரசு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், ஆளுநரும் அரச அதிபரும் உடனடி நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.


அன்றாட வாழ்விற்கு வழிதேடி, வீடுகளைவிட்டு வெளியில் வந்து வேலைதேடும் மக்களை ஊரடங்கு சட்டத்தை மீறினார் என்று கூறி அவர்களை அடித்துத் துன்புறுத்தி, கைதுசெய்வதைவிட அவர்களுக்கு நிவாரணங்களை வழங்கி அவர்களும் வீடுகளிலிருந்தவாறே பொருட்களைக் கொள்வனவு செய்யும் சூழலை ஏற்படுத்துவதே ஒரு அரசாங்கத்தினது தலையாய கடமையாகும் என்று அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments