நாளை முதல் யாழில் திருக்குறள் மாநாடு!


உலகத் திருக்குறள் இரண்டாவது மாநாடு -2020 பன்னாட்டுக் கருத்தரங்கம் எதிர்வரும் 21, 22, 23 ஆம் ஆகிய மூன்று தினங்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ளது.

மாநாட்டில் பல நாடுகளிலிருந்தும் வருகை தந்துள்ள பல்வேறு தரப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அதே போன்று தாயகத்திலுள்ள அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மாநாடு தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பொன்றை இந்தியாவின் தஞ்சாவூர் தமிழ்த் தாய் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர்; உடையார்கோவில் குணா தலைமையில் யாழ் ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை நடந்திருந்தது.

தஞ்சாவூர் அறக்கட்டளை சார்பாக பல்வேறு தமிழ் இலக்கியப் பணிகளை உலகளாவிய ரீதியில் மேற்கொண்டு வருகிறோம். அந்த அடிப்படையில் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டுமென ஆர்ப்பாட்டங்களையும் hநாடுகளையும் கருத்தரங்குகளையும் நடாத்தியிருக்கின்றோம்.

மாலைதீவு ,அந்தமான், கொல்கத்தா, மலேசியா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து மாநாடுகள் கருத்தரங்குகளை நடாத்தி வந்த நாங்கள் கடந்தாண்டு உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு மலேசியாவில் உலகத் திருக்குறள் முதலாவது மாநாட்டை நடாத்தியிருந்தோம்.

உலகளாவிய ரீதியில் ஐநூறு பேராளர்கள் கலந்து கொண்ட அறிஞர்கள் கலந்து கொண்ட மாநாடாக திருக்குறள்; மாநாடு விளங்கியது. அதனைத் தொடர்ந்து புலம் பெயர் தமிழர்கள் மட்டுமல்லாமல் யாழ்ப்பாண மண்ணிலே வாழக்கூடிய உணர்வுமிக்க தமிழ் அறிஞர்களும் தமிழ் மக்களும் கலந்து கொள்ள வேண்டுமென்ற நோக்கத்தில் இரண்டாவது உலகத் திருக்குறள் மாநாட்டை நாளை வெள்ளிக்கிழமை முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடாத்துவதற்கு திட்டமிட்டிருக்கின்றோம். 

இந்த திருக்குறள்; மாநாட்டை தமிழ்த் தாய் அறக்கட்ளை முன்னெடுத்து நடாத்தினாலும் கூட உலகத் தமிழாராச்சி நிறுவனம், இந்தியாவின் மதுரை காமராஐர் பல்கலைக்கழகம், இதய நிறைவு தியான அமைப்பு, சிறிராமச்சந்த்ர மிஸன், இலங்கை இந்திய தமிழ்த் தாய் அறக்கட்டளையும் இணைந்து நடத்துகின்றன.

மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பல்வேறு நாடுகளிலிருந்தும் பேராளர்களும் அறிஞர்களும் வருகை தந்திருக்கின்றனர். குறிப்பாக மலேசியாவில் இருந்த 27 பேராளர்களும், தமிழகத்திலிருந்து 150 இற்கும் மேற்பட்ட பேராளர்களும், அதே போல பிரான்ஸ், குவைத், அவுஸ்திரேலியா பேராளர்கள் வருகை தர இருக்கின்றார்கள். 

தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் அறிஞர்களுடைய ஆய்வுக் கட்டுரைகளும் சிறப்பு மலரும் வெளியிட இருப்பதோடு மாநாட்டினுடைய முத்தாய்வாக கருங்கல்லினால் செய்யப்பட்ட இரண்டு திருவள்ளுவர் சிலையை மாநாட்டிற்கு வருகின்றவர்களை வரவேற்கும் முகமாக மாநாட்டின் முகப்பில் நிறுவ இருக்கின்றோம். 

அதன் பின்னர் முதலாவது திருவள்ளுவர் சிலையை மாநாட்டின் ஆரம்ப நாளன்று உரும்பிராய் பொது வீதியில் நிறுவுவதற்காக அன்பளிப்பாக வழங்க இருக்கின்றோம். இதனை யாழிலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் பாலச்சந்திரன் நிறுவி வைக்க இருக்கின்றார். அதே போல இரண்டாவது திருவள்ளுவர் சிலையை மாநாட்டின் நிறைவில் அம்பாறை மாவட்டம் காரை தீவு பிரதேசத்தில் நிறுவ இருக்கின்றோம். இதனை வடக்கு மாகாண ஆளுநர் திருமதி சாள்ஸ் நிறுவி வைக்க இருக்கின்றார்.

இதேவேளை திருக்குறள் ஆய்வரங்கம் மாநாட்டை பல்வேறு இடங்களில் நடாத்தினாலும் கூட யாழ்ப்பாணத்தில் இந்த மாநாட்டை நடாத்துவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக யாழ்ப்பணாத்தில் இருக்கின்ற தமிழர்களின் தமிழ் மொழியை கையாளுகின்ற விதம் தாய்த் தமிழ் என்று சொல்லுகின்ற தமிழகத்தில் கிடையாது. இங்கு கலப்பு இல்லாமல் தமிழை தமிழாகவே பேசுகின்றார்கள். 

தமிழர்களுடைய பழமையான மொழியினுடைய உணர்வை அப்படியே அழகாகச் சொல்லுகிறார்கள். உண்மையான தமிழ் வாழக் கூடிய இடமாக யாழ்ப்பாணமே உள்ளது. யாழ்ப்பாணத்தில் உண்மையான தமிழ் மொழியைப் பேசுகின்ற உணர்வுபூர்வமான தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதே எனது கருத்தாக இருக்கிறது. அந்த அடிப்படையிலையே இந்த மாநாட்டை யாழ்ப்பாண மண்ணில் நடாத்த வேண்டுமென்ற சிந்தனையில் இங்கு நடாத்துகின்றோம். 

மேலும் மலேசியாவில் நடைபெற்ற முதலாவது மாநட்டில் இந்தியாவில் மலேசியவில் இருந்து வந்தவர்கள் கலந்து கொண்டிருந்தனர். அதே நேரத்தில் இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் இருந்து பெருமளவிலானவர்கள் வருகை தந்து கலந்த கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆகவே யழ்ப்பாணத்தில் நடாத்துவது சிறப்பாக இருக்குமென்ற அடிப்படைக் காரணத்தினால் தான் இரண்டாவது மாநாட்டை யாழில் நடாத்துகின்றோம் என்றார்.

ஆகவே யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்ற உலகத் திருக்குறள் மாநட்டிற்கு அனைவரும் ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கி பங்குபற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு இரண்டாவது மாநாடு யாழ்ப்பாணத்தில் நிறைவடைந்த பின்னர் இதன் மூன்றாவது மாநாடு இந்தியாவின் தஞ்சாவூரில் நடாத்துதென்ற தீர்மானத்தையும் இந்த மாநாட்டில் நிறைவேற்ற இருக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments