வனவள திணைக்களத்தின் அடாவடி

வவுனியா - நாலாம்கட்டை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தாம் மைதானமாக பயன்படுத்திய பகுதியை இன்று (13) துப்புரவாக்க சென்ற போது வனவள திணைக்களம் அதற்கு தடையை ஏற்படுத்தியமையால் அங்கு சற்றுநேரம் குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது.

குறித்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கடந்த 2002ம் ஆண்டு முதல் இப்பகுதியை விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வந்துள்ளனர். பின்னர் 2007ம் ஆண்டளவில் இடம்பெயர்ந்த நிலையில் அதில் சிறிய இராணுவசாவடி ஒன்று அமைக்கப்பட்டது. அதன்பின்னர் குறித்த பகுதியை அபகரிப்பதற்கு பலர் முயற்சி செய்த போதும் மக்களின் எதிர்ப்பால் அது கைவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது குறித்த பகுதி பற்றைவளர்ந்து காடு மண்டியிருந்த நிலையில் இதனை மீண்டும் மைதானமாக பயன்படுத்துவதற்காக இன்றையதினம் இளைஞர்கள் சிலர் ஒன்று கூடி அதனை துப்புரவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதன்போது அப்பகுதிக்கு சென்ற வனவள திணைக்கள அதிகாரிகள், இது தமது திணைக்களத்திற்கு உரிய பகுதி என்று தடை ஏற்படுத்தியமையால் இளைஞர்களிற்கும் அவர்களிற்கும் இடையில் குழப்பநிலை ஏற்பட்டது.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் தர்மபால செனவிரத்ன வருகைதந்திருந்தார்.

இருதரப்புடனும் கலந்துரையாடிய அவர் குறித்த பகுதியை மைதானமாக பயன்படுத்துவதற்கான வேண்டுகோளை எழுத்துமூலமாக வழங்குமாறு தெரிவித்ததுடன், அதனை மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முன்வைத்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டமைக்கமைய சுமூகமான நிலை ஏற்பட்டது.

No comments