அவர்களை செருப்பால் அடிப்பேன் - கொந்தளித்த தேரர்

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தி கொடுக்கும் வரை நான் அமைதியாக இருக்க மாட்டேன். பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவோம் என கூறிக்கொண்டு திரிகின்றவர்களுக்கு நான் செருப்பால் தான் பதில் சொல்வேன். மரணத்தை தழுவும் வரை பிரதேச செயலகம் தரம் உயர்த்தி தருவதற்காக பாடுபடுவேன்.

இவ்வாறு நேற்று (15) கல்முனையில் இடம்பெற்ற பொங்கல் விழாவில் கல்முனை ஸ்ரீ சுபத்திரராம  விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் தெரிவித்தார். மேலும்,

அரசியல்வாதிகளை நம்பி இந்நாடு மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் உரிமையை பெற்றுக் கொடுப்பதற்காக மதத் தலைவர் என்ற ரீதியில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக் கோரி உண்ணாவிரதம் இருந்தேன். ஆனால் இன்று தங்களது பெயரை அரசியலுக்காக உட்புகுத்தி இந்த பிரதேசத்தில் உலா வருகின்றனர். அவர்களுக்கு இந்த புனித நாளில் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது, கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தி கொடுக்கும் வரை நான் அமைதியாக இருக்க மாட்டேன்.

இந்நாட்டில் தமிழர்களுக்கும் உரிமை உண்டு. சிலர் நினைக்கின்றனர் தமிழ் மக்களை இந்தியாவில் இருப்பவர்கள் காப்பாற்ற வேண்டும் என்று. இந்த மண்ணில் பிறந்த அத்தனை மக்களுக்கும் அதிகாரம் இருக்கிறது. இந்த நாட்டில் சிங்களவர்களுக்கு மாத்திரம் தான் அதிகாரம் இருக்கிறது, கௌரவம் இருக்கிறது என்பதை நீங்கள் சிறிதளவும் எண்ணக்கூடாது. தமிழ் மக்களுக்கும் அதிகாரம் உள்ளது.

அப்பாவி தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று தமிழர்களின் பிரதிநிதிகளாக நாடாளுமன்றம் சென்றவர்கள் வெறுமனே குரல் கொடுப்பதாக நடிக்கின்றனர். அதைத் தவிர தமிழ் மக்கள் பற்றி எவருக்கும் கவலைப்படுவதில்லை மாறாக அவர்கள் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். நான் தமிழ் மக்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் தான் அதிகாரம் மிக்கவர்கள். நீங்கள் தான் அவர்களை தெரிவு செய்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கிறீர்கள்.

ஆனால் தமிழ் மக்களுக்கு சில பௌத்த துறவிகளை கண்டால் பயம். அவர்கள் பயங்கரமானவர்கள். அவர் வந்தால் பயங்கரமான வேலைகளை தான் செய்வார் என நினைக்கின்றனர். அப்படி இல்லை நாங்களும் உங்களைப் போன்ற சாதாரண மனிதர்கள். சங்கரத்ன தேரர் ஆகிய எண்ணெய் தமிழ் மக்கள் நம்புகின்றனர். நான்தான் தமிழ் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். கல்முனை பிரதேச செயலகத்தை தரம் உயர்த்திக் கொடுக்கும் வரை தமிழ் மக்களோடு தோள்கொடுத்து நிற்பேன். - என்றார்.

No comments