தொடங்கியது டக்ளஸின் தர்பார்?


உள்ளுர் மக்களது எவ்வித சம்மதமுமின்றி தீவக கடற்கரைகளை வெளியாருக்கு தாரை வார்க்க கடற்றொழில் அமைச்சு முயற்சிகளில் குதித்துள்ளதாக மீனவ அமைப்புக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே தீவக மீனவ அமைப்பு பிரதிநிதிகள் இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன.

வேலணை பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட சுமார் 150 ஏக்கர் ஆழங்குறைந்த கடலை சரவணை,மண்கும்பான்,அராலிக்கு இடைப்பட்ட பிரதேசத்தில் தலா 50 ஏக்கர் ஒருவரிற்கென்ற வகையில் வெளியாருக்கு பகிர்ந்தளிக்கும் முயற்சியில் கடற்றொழில் அமைச்சு ஈடுபட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இப்பகுதி ஓரளவு நன்னீர் கடலுடன் சேரும் பகுதியாக உள்ளதுடன் பறவைகள் சரணாலயமாகவும் உள்ளது.

இப்பகுதியில் இறால் வளர்ப்பினை முன்னெடுக்க போவதாக கூறியே காணி பகிர்ந்தளிக்கப்படுகின்றது.

ஏற்கனவே புத்தளத்தில் இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட இறால் வளர்ப்பு திட்டம் பாரிய ஆபத்தை தோற்றுவித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக நன்னீர் பாதிப்பு ,தொற்று நோய்கள் என பாதிப்பு ஏற்பட்டுள்ளது.திட்டமும் தற்போது கைவிடப்பட்டுவருகின்றது.

இந்நிலையில் வேலணை பிரதேச செயலக ஆதரவுடன் உள்ளுர் மீனவர்களது எதிர்ப்பை புறந்தள்ளி தற்போது இறால் வளர்ப்பிற்கென காணி வழங்குவது முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

வடக்கின் அபிவிருத்தி என்ற போர்வையில் எமது நிலத்தை இவ்வாறு வெளியாருக்கு தாரை வார்க்கப்போவதில்லையெனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதே வேளை உள்ளுர் மீனவர்களது பங்கெடுப்புடன் தீவகப்பகுதியில் முன்னெடுக்கப்படும் கடலட்டை,நண்டு வளர்ப்பு போன்றவையே வெற்றி பெறுமென தெரிவித்த அவர்கள் அதற்கு தமது ஆதரவை வளங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதனிடையே தனியாருக்கு தீவக கடற்கரைகளை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மகஜர்களை மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கடற்றொழில் திணைக்கள யாழ்.அதிகாரிகளிடம் அவர்கள் கையளித்துள்ளனர்.

முன்னதாக தீவகப்பகுதியில் தனது அனுமதியின்றி கடற்கரைகள் வெளியாருக்கு வழங்கப்படமாட்டாதென கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடகவியலாளர்களிடையே தெரிவித்திருந்த நிலையில் இக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

No comments