பதிவை திருபுபடுத்தி என்னை தாக்குகின்றனர்; சாதியம் பேசவில்லை

முகநூலில் நான் எழுதிய பதிவு ஒன்றை சிலர் தங்களுக்கு இயைந்தால்போல் சாதி கதையாக மாற்றி அபகீர்த்தியை உண்டாக்கியிருப்பதாக யாழ் மாநகரசபை உறுப்பினர் ப.தர்ஷானனன் கூறியுள்ளார்.

இன்று (11) யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை அவர் தெரிவித்தார். மேலும்,

ஒளவையார் எழுதிய மூதுரையில் உள்ள பாடல் ஒன்றை எனது முகநூலில் எழுதியிருந்தேன், அதாவது "நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு - மேலைத் தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம் குலத்து அளவே ஆகும் குணம்". அதனை சபையில் சில உறுப்பினர்கள் தங்கள் சுயநலனுக்காக நான் சாதியை குறித்து எழுதியதாகவும் பேசியதாகவும் கூறியுள்ளனர்.

சிலர் அதனை ஒரு வேலையாகவே செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால் ஒருவருடைய கல்வி அறிவை குறித்தே நான் முகநூலில் பதிவிட்டேன். தனிநபரை அல்லது சாதியை குறித்து நான் எழுதவில்லை.

மக்களும் சிலர் அதனை தவறாக புரிந்து கொண்டிருக்கின்றனர். அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டு கொள்ளுகிறேன். மேலும் கட்சி என்னிடம் விளக்கம் கேட்டுள்ளது. அதனை நான் எழுத்திலும், நேரிலும் கூறுவேன். மக்களுக்கும் வெளிப்படுத்துவேன் என்றார்.

No comments