நாகர்கோவில் இலங்கை இராணுவ சுற்றிவளைப்பினுள்?


வடமராட்சி,கிழக்கு நகர்கோவில் இன்று அதிகாலை முதல் இலங்கை இராணுவச் சுற்றிவளைப்புக்குள் சிக்குண்டுள்ளது.நேற்றிரவு, இராணுவத்தினர் மற்றும் உள்ளுர் இளைஞர்கள் சிலருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடே சுற்றிவளைப்பிற்கு காரணமாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.சுற்றிவளைப்பில் உள்ளுர் இளைஞர்கள் நால்வர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் மேலும் படைகள் களமிறக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

நேற்றைய முறுகல் நிலையினையடுத்து மக்கள் மீது படையினர் கெடுபிடிகளை முன்னெடுத்துவருவதுடன் சில இடங்களில் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் சொல்லப்படுகின்றது.

யாழ். வடமராட்சி கிழக்கு- நாகர்கோவில் பகுதியில் இராணுவத்தினருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ள நிலையில் 4 இளைஞர்களை இராணுவம் கைது செய்துள்ளதுடன் குறித்த பகுதியை  இராணுவம் சுற்றிவளைத்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது.
முன்னைய செய்தி:
இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்று நள்ளிரவு குறித்த பகுதியில் இராணுவ வாகனத்துக்கு  வழி விடவில்லை என கூறி இளைஞர்கள் சிலருடன் இராணுவத்தினர் முரண்பட்டுள்ளனர்.
இதனையடுத்து இரு தரப்புக்குள்ளும் மோதல் இடம்பெற்றுள்ளது.
இந்த மோதலில் இரு தரப்பிலும் சிலர் காயமடைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், உடனடியாக சம்பவ இடத்தில் இராணுவம் குவிக்கப்பட்டு 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். 
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் உடனடியாக பருத்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், நேற்று நள்ளிரவு தொடக்கம் குறித்த பகுதியை இராணுவம் முற்றுகையிட்டு தொடர் சோதனை நடாத்திவருவதாக கூறப்படுகிறது. 
இதனால் பொதுமக்கள்- இராணுவம் இடையில் முறுகல் நிலை காணப்படுவதாகவும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு இன்று காலை சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments