காணாமல் ஆக்கப்பட்டவரது உயிரை தர முடியாது

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினையில் அவர்களின் உயிரை ஒருபோதும் மீட்டுத் தரமுடியாதென இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாயணக்கார தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த நேர்காணலில் கடந்த யுத்த காலங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் காணாமல் ஆக்கப்பட்டமை, கொலைச் சம்பவங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு நீங்கள் வழங்கும் தீர்வுகள் என்ன என அவ்வூடகம் கேள்வி எழுப்பியது.

அதற்கு பதிலளித்த வாசுதேவ நாயணக்கார,

அவை நீடிக்கும் துக்கங்களாகும். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்து என சொல்லுங்கள், எமது காணிகளை மீள வழங்குங்கள்,எமது வாழ்க்கைக்கான தொழிலை நடத்த கடற்படையின் தடைகளை நீக்குங்கள் என்பனவே வடக்கிலுள்ள தமிழ் மக்களின் கோரிக்கைகளாகும்.

அந்தவகையில் குறித்த மக்களின் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு தீர்வை முன்வைத்துள்ளோம். எனினும் இறுதியாக காணாமலாக்கப்பட்டவர்களின் பிரச்சினையில் அவர்களின் உயிரை மீட்டுத் தரமுடியாது. ஆகவே அவர்களுக்காக, அவர்களது குடும்பத்தாருக்கு உதவிகளை வழங்குகின்றோம் – என்றார்.

No comments