சிறுமியை கடத்தி வன்புணர்ந்த குற்றவாளிகள் அடையாளம் காணல்

14 வயதுச் சிறுமி ஒருவரை கடத்திச் சென்று வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவர் சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் - கோப்பாய், இருபாலையில் கடந்த மாதம் 15ம் திகதி இந்த வன்புணர்வுச் சம்பவம் இடம்பெற்றது. ஒழுங்கை ஒன்றில் நின்று 14 வயதுச் சிறுமியும் அவரது நண்பரும் கதைத்துக் கொண்டிருந்த போது, அந்த வழியால் வந்த இருவர், அவர்களை மிரட்டியுள்ளனர்.

மதுபோதையில் இருந்த குறித்த நபர்கள் இருவரும் சிறுமியின் நண்பரைத் தாக்கியுள்ளனர். அவர்களில் ஒருவர் சிறுமியை அச்சுறுத்தி தனது மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்றதுடன், மற்றையவர் சிறுமியின் நண்பரை மிரட்டி தடுத்து வைத்திருந்துள்ளார்.

சிறுமியை ஒதுக்குப் புறம் ஒன்றுக்கு அழைத்துச் சென்ற மற்றைய நபர் அவரை சித்திரவதை செய்து வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார். வீடு திரும்பிய சிறுமி, சம்பவம் தொடர்பில் தாயாரிடம் தெரிவித்ததை அடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியும் தாயாரும் கோப்பாய் பொலிஸில் கடந்த 23ம் திகதி முறைப்பாடு வழங்கியுள்ளனர்.

இனையடுத்து சிறுமியின் நண்பரை அழைத்து விசாரணை செய்த பொலிஸார், அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர்கள் இருவரைக் கைது செய்தனர். சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிமன்றில்  கடந்த 26ம் திகதி முற்படுத்தப்பட்டனர்.

சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் பி அறிக்கை தாக்கல் செய்திருந்த பொலிஸார், சந்தேகநபர்கள் இருவரையும் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த விண்ணப்பம் செய்திருந்தனர். அதனடிப்படையில் சந்தேகநபர்கள் இருவரும் இன்று (10) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட போது அடையாள அணிவகுப்பை நடத்த மன்று உத்தரவிட்டது.

இதன்படி சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் அடையாள அணி வகுப்புக்கு சந்தேக நபர்கள் முற்படுத்தப்பட்டனர். இதன்போது பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது நண்பரும் தனித்தனியே அடையாள அணிவகுப்பில் சந்தேகநபர்களை அடையாளம் காண அழைக்கப்பட்டனர்.

சிறுமியும் அவரது நண்பரும் எந்தத் தயக்கமுமின்றி சந்தேகநபர்கள் இருவரையும் அடையாளம் காட்டினர். இதனைத்தொடர்ந்து சந்தேக நபர்கள் இருவரது விளக்கமறியலும் வரும் 20ம் திகதிவரை நீடித்து மன்று உத்தரவிட்டது.

No comments