காணாமல் போனவர் சடலமாக மீட்பு!

மன்னார், நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நறுவிலிக்குளம் பகுதியில் வசிக்கும் இளம் குடும்பஸ்தர் காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போயிருந்த குறித்த குடும்பஸ்தர் நறுவிலிக்குளம் பகுதியில் உள்ள பொது மயானப் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை சடலமாக எடுக்கப்பட்டார்.
நானாட்டான் பிரதேச  சபையில் வெளிக்கள உத்தியோகத்தராக கடமையாற்றி வந்த அன்ரனிஸ் நிமால் (வயது-30) என்ற குறித்த குடும்பஸ்தர், கடந்த  சனிக்கழமை காலை 8  மணியளவில் வேலைக்கு செல்வதாகக் கூறிச் சென்றார்.
இரவாகியும் வீடு திரும்பாத காரணத்தால் அன்று இரவு 11 மணியளவில் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் மனைவி முறைப்பாட்டினை பதிவு செய்திருந்தார்.
முருங்கன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்ததோடு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தொடர்ச்சியாக அவரைத் தேடி வந்துள்ளனர்.
இந்நலையில், வயோதிபர் ஒருவர் பங்குத் தந்தை, பொலிஸார் மற்றும் கிராம அலுவலகர் ஆகியோருக்கு தகவல் வழங்கினார். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் விசேட தடவியல் நிபுணத்துவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதன்போது காணாமல் போனதாக கூறப்பட்ட தனது கணவரே உயிரிழந்துள்ளதாக அவரது மனைவி அடையாளம் காட்டினார். பின்னர் மன்னார் பதில் நீதவான் இ.கயஸ்பெல்டானோ இன்று பிற்பகல் 2 மணியளவில் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டார்.
பின்னர் பதில் நீதவானின் உத்தரவிற்கு அமைவாக பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

No comments