மீண்டும் அகதிகளாக்கப்படும் வலி.வடக்கு மக்கள்!


வலி.வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் மீண்டும் அகதிகளாக்கப்படுவது தொடர்கின்றது.

கடந்த கால யுத்தத்தால் இடம்பெயர்ந்து யாழ். சுன்னாகம் கந்தரோடை பிள்ளையார் நலன்புரி முகாமில் வசித்து வந்த வலி.வடக்கு மக்களின் பல்வேறு வீடுகளுக்குள் வெள்ளநீர் உட்புகுந்த காரணத்தால் அவர்கள் மீண்டும் இடம்பெயர்ந்துள்ளனர்.குறித்த முகாமின் 19 குடும்பங்களைச் சேர்ந்த 70 வரையான பொதுமக்கள் இடம்பெயர்ந்து யாழ். சுன்னாகம் றோ. க. த. க பாடசாலையில் தற்காலிகமாகத் தங்கியுள்ளனர்.

மேற்படி முகாமைச் சேர்ந்த பல குடும்பங்கள் அவர்களது சொந்தவிடங்களில் மீளக் குடியேறியுள்ளனர். எனினும், தற்போது முகாமில் தங்கியுள்ள குடும்பங்களில்13 குடும்பங்கள் இன்னும் மீளக் குடியமர அனுமதிக்கப்படவில்லை. ஏனைய ஆறு குடும்பங்களும் மீளக் குடியமர அனுமதிக்கப்பட்ட போதும் அவர்கள் குடியேறுவதற்குரிய வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை.

இந்நிலையில் கடந்த சில நாட்களாகத் தொடரும் அடைமழை காரணமாக நேற்றைய தினம்(06) குறித்த முகாமில் தங்கியிருந்த 19 குடும்பங்களும் முகாமிலிருந்து இடம்பெயர வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அடைமழைகாரணமாக முகாமில் தாம் தற்காலிகமாக வசித்து வந்த வீடுகள் பலவும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments