யாழிலும் புத்தர்:திருட்டு மௌனத்தில் பெரும்பான்மை?


யாழ்.சிறைச்சாலைக்கு முன்பதாக அமைக்கப்படும் புத்தர்; சிலை உள்ளிட்ட நிர்மாண நடவடிக்கைகள் தொடர்பில் சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுடன் அரச பங்காளிகளான ஈபிடிபி மற்றும் கூட்டமைப்பின் பங்காளியான ஜதேக தரப்புக்கள் திருட்டு மௌனத்தை கடைப்பிடிக்க தொடங்கியுள்ளன.

ஏதிர்வரும் 27ம் திகதி குறித்த சர்ச்சைக்குரிய நிர்மாணம் தொடர்பில் விசேட கூட்டமொன்று யாழ்.மாநகரசபையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களது அழைப்பின் பேரில் நடைபெறவுள்ளது.

மக்களதும் யாழ்.மாநகரசபையினதும் எதிர்ப்பினையடுத்து சிறைச்சாலை முன்பதான கட்டுமானம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த கூட்டத்தில் பங்கெடுக்காது விலகியிருக்க ஈபிடிபி உள்ளிட்ட இத்தரப்புக்கள் தயாராகிவருகின்றன.


யாழ் மாநகர எல்கைக்குட்பட்ட நகரப் பகுதியில் பௌத்த சின்னங்களை வைக்கும் விவகாரம் தொடர்பில் எதிர்வரும் 27 ஆம் திகதி மாநகர சபையில் அவசர கூட்டமொன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


யாழ்.மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசத்தில் உள்ள யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு முன்பாக சிறைச்சாலைகள் நிர்வாகம் பௌத்த சிங்கள மயமாக்கலைப் பிரதிபலிக்கின்ற சின்னங்கள் மற்றும் கட்டுமானங்களை சட்ட விதிமுறைகளுக்கு முரணான விதத்தில் அமைத்து வருகின்றது.



இவ்வாறு அனுமதி இன்றி நடைபெறுகின்ற இவ் சிங்கள மயமாக்கல் தொடர்பாக ஆராய்வதற்கும் எதிர்காலத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் தொடராமல் இருப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்குமென விசேட பொதுக்கூட்டத்தை கூட்டுமாறு யாழ்.மாநகர சபை உறுப்பினர்களான வரதராஜன் பார்த்திபன், சிவகாந்தன் தனுஜன், மகேந்திரன் மயூரன் ஆகியோர் கேட்டுக்கொண்டனர்.



இதற்கமைய எதிர்வரும் 27.12.2019 வெள்ளிக்கிழமை மாநகர பிரதி முதல்வர் தலைமையில் காலை 9.30 மணிக்கு மேற்கூறித்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்கு என விசேட கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments