எவரையும் ஆதரிக்க மாட்டோம்- மறத்தமிழர்

அனைத்து வேட்பாளர்களின் விஞ்ஞாபனமும் திருப்தி கொள்ளும் வகையில் இல்லாதமையினால், யாருக்கும் ஆதரவு வழங்க விருப்பமில்லையென மறத்தமிழர் கட்சி தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பில் மறத்தமிழர் கட்சியின் ஊடகச் சந்திப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.
இதன்போதே அக்கட்சியின் பொதுச்செயலாளர் நா.பத்மநாதன் கலந்துகொண்டு உரையாற்றுகையில், “இரண்டு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களும் தமிழ் மக்களை ஏமாற்றிய வரலாறுகளே அதிகம் இருப்பதன் காரணமாக, எமது கட்சியினால் எந்த வேட்பாளருக்கும் ஆதரவு வழங்கமுடியாத நிலைமையே தற்போது காணப்படுகின்றது.
கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ- கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் தமிழர்களுக்கான ஒரு தீர்வினை வழங்ககூடிய பலம் இருந்தபோதிலும் அதனை வழங்காமல் தமிழ் மக்களை ஏமாற்றினார்கள்.
அதேபோன்று சஜித் பிரேமதாசவினுடைய, கட்சியின் ஆட்சிக்காலம் தற்போது நடைபெற்றுவரும் நிலையிலும் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான தீர்வும் வழங்காமல் இழுத்தடிப்புகளே இடம்பெற்று வருகின்றன
இதன் காரணமாகவே பிரதான கட்சி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் மற்றும் உறுதிமொழிகள் தொடர்பாக எம்மால்  திருப்திகொள்ள முடியாமல் உள்ளமையினால் தேர்தலில் யாருக்கும் ஆதரவு வழங்க முடியாத நிலைமையில் உள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார்.

No comments