இரவு 11 மணி வரை மழை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமேல், சப்ரகமுவ மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் மேலும் தொடரும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், இன்று (சனிக்கிழமை) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் மற்றும் இரவு வேளையில், குறிப்பாக இரவு 11 மணி வரை மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஏற்படும் என திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, நாளை, வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய, தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு, வடமேல், மத்திய, சப்ரகமுவ, மேல், ஊவா, மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களின் சில இடங்களில், குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், புத்தளம், குருநாகல், இரத்தினபுரி, கேகாலை, கண்டி, நுவரெலியா, மாத்தளை, பதுளை, மொணராகலை, அநுராதபுரம் மாவட்டங்களில் 100-150 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பகுதிகளில், குறிப்பாக மேல் மற்றும் தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

No comments