அவர்கள் தான் எம்முடன் பேச வேண்டும்; சுமந்திரன்


பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களை தாம் சந்திக்க வேண்டிய அவசியமில்லை என்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அவர்கள்தான் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் பின்னால் சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நாம் தயாரில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள 13 அம்சக் கோரிக்கைகள் எமக்கு மிகவும் முக்கியமானதாகும் என்றும் இந்த கோரிக்கைகள் தொடர்பாக பிரதான கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்கள் அனைவருடனும் பேச நாம் எப்போதும் தயாராகவே இருக்கின்றோம் என்றும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அவர்கள் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுகொள்ள வேண்டும் என தெரிவித்த சுமந்திரன் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தமிழர் பிரதிநிதிகளாகிய எமது நிலைப்பாடு என்ன என்பதை அறிந்துகொள்ள பிரதான கட்சிகள் ஆவலாக உள்ளனர் என கூறினார்.

இருப்பினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு தினமான  31 ஆம் திகதிக்கு முன்னர் எமது  நிலைப்பாட்டை அறிவிப்போம் என்றும் அதற்கிடையில் நாம் 5 தமிழ் கட்சிகளும் மீண்டும் இந்த வாரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.

No comments