மனிதரை தேடி இடம்பெறாத விசாரணை யானைகளை தேடி இடம்பெறுகிறது

அண்மையில் காணாமல் போன 9 யானைகளுக்கே விசாரணைக்குழு அமைத்த இந்த அரசு பேருந்துகளில் ஏற்றப்பட்ட குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் என்ன நடந்தது என்பதை விசாரிக்கவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

வவுனியாவில் நேற்று (01) இடம்பெற்ற காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இறுதிக்கட்ட யுத்தம் நிறைவடைந்ததன் பிற்பாடு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையினுடைய அனுசரணையோடு பல ஆயிரக்கணக்கான போராளிகளும், பொதுமக்களும் குடும்பம் குடும்பமாக இராணுவத்தினரிடம் சரணடைந்தார்கள். யுத்தம் நிறைவடைந்து பத்து வருட காலம் ஆகிவிட்டநிலையில் சரணடைந்த குடும்பத்தினருக்கு என்ன நடந்தது. அவர்களுடன் சென்ற கைக் குழந்தைகளுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக இதுவரைக்கும் இலங்கை அரசாங்கமோ அல்லது ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையோ சரியான பதிலை தெரிவிக்கவில்லை.

இலங்கையிலேயே 9 பெண் யானைகள் காணாமல் போய் விட்டது என்பதற்காக அதற்காக ஒரு விசாரணை குழுவை இந்த அரசாங்கம் நியமித்திருந்தது. ஆனால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினுடைய அனுசரணையோடு, ஆதரவோடு, வெள்ளைக் கொடியோடு சரணடைந்த போராளிகள், பொதுமக்கள், அவர்களுடைய குடும்பத்தினர், குழந்தைகளுக்கு என்ன நடந்தது என்பதை கண்டுபிடிப்பதற்கு இந்த அரசாங்கம் 10 வருடமாகியும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

எனவே இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையை ஏமாற்றி இருக்கின்றது. இங்கிருக்கின்ற மக்களை ஏமாற்றி இருக்கின்றது. அரசாங்கம் தொடர்ந்தும் இந்த சரணடைந்த காணாமல் போன சிறுவர்கள், குழந்தைகளுக்கு என்ன நடந்தது என்பதை காலம் கடத்தாமல் விரைவாக இவர்களுக்கான ஒரு நீதியை பெற்று தரவேண்டும் - என்றார்.

No comments