யாழ் விமான நிலைய விவகாரம்; நாமலை தாக்கிய ரஞ்சன்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பெயர்ப் பலகையில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதை மையப்படுத்தி இனவாதத்தைத் தூண்டும் வகையில் சில சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிடுவது கடும் கண்டனத்திற்குரியது என்று இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்ட நிலையில் விமான நிலையத்தின் பெயர் அதன் பெயர்ப் பலகையில் முதலில் தமிழ் மொழியிலும், இரண்டாவதாக சிங்கள மொழியிலும், மூன்றாவதாக ஆங்கில மொழியிலும் பெயரிடப்பட்டிருந்தது. அதனை சுட்டிக்காட்டி சில சிங்கள ஊடகங்கள் 'சிங்கள மொழி இரண்டாம்பட்சமாக்கப்பட்டு விட்டது' என்ற கோணத்தில் செய்தி வெளியிட்டிருந்தன.

தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடமாகாணத்தில் பொதுச் சேவையை வழங்கும் யாழ்ப்பாண நீதிமன்றம், யாழ் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் போன்றவற்றின் பெயர்ப்பலகைகளிலும் முதலாவதாக தமிழ் மொழியிலேயே பெயரிடப்பட்டிருப்பதை தமது சமூகவலைத்தளப் பக்கங்களில் சுட்டிக்காட்டிய சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பலரும், இனவாதத்தைத் தூண்டும்விதமாக செய்தி வெளியிட்டிருந்த சிங்கள ஊடகங்களைக் கடுமையாகக் கண்டனம் செய்திருந்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் ரஞ்சன் ராமநாயக்கவும் கண்டம் வெளியிட்டுள்ளார்.

அதில் மேலும்,

உலகின் வெற்று விமான நிலையமான மாத்தளை விமான நிலையத்திற்கு வெக்கமில்லாமல் நாமல் ராஜபக்சவின் தந்தை தனது பெயரை வைத்துள்ளார். இன்று அவரைப் போலல்லாமல் ஜனாதிபதி அல்லது பிரதமரின் பெயர் இல்லாமல் யாழ்ப்பாணம் விமான நிலையம் என்று அழகிய பெயர் வைக்கப்பட்டுள்ளது - என்றும் குறிப்பிட்டுள்ளார்.

No comments