கல் அகழ்வினால் உயிர் அச்சுறுத்தலை எதிர் நோக்கும் மக்கள்

வவுனியா - வாரிக்குட்டியூர் கிராமத்தில் 6 வருடங்களாக கல் அகழ்வு பணி நடைபெற்று வருவதால் அதற்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் உயிர் அச்சுற்றுத்தல்களை சந்தித்து வருவதாக குற்றசாட்டியுள்ளனர்.

செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வாரிகுட்டியுர் கிராமத்திற்கருகில் கல் அகழ்வு பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சுமார் 100 அடி ஆழம் வரை கற்பாறைகள் உடைக்கபட்டு கற்கள் அகழப்பட்டு வருகின்றன. பாறைகளை உடைப்பதற்காக சக்தி வாய்ந்த வெடி மருந்துகள் பயன் படுத்தப்படுகின்றன. இதனால் வெடித்து சிதறும் கருங்கற்கள் அருகில் அமைந்துள்ள கலைமகள் கிராமத்தில் வசிக்கும் மக்களின் வீடுகளிற்குள் வந்து விழுகின்றன.

தொடர்ச்சியாக இவ்வாறு இடம்பெற்று வருகின்ற நிலையில் நேற்று (09) மாத்திரம் 15 பேரது காணிகளிற்குள் பெரியளவிலான கற்கள் வந்து விழுந்துள்ளதுடன், நான்கு வீடுகளின் கூரைதகடுகளும் சேதமடைந்துள்ளன.

நிலமட்டத்தில் இருந்து 100 அடிக்கும் ஆழமான பகுதிகளில் கற்கள் உடைக்கப்படுவதால், அண்மையில் உள்ள கிராமத்தின் கிணறுகள், குழாய் கிணறுகளில் நிலத்தடி நீர் மிகவும் கடுமையாக பாதிக்கபட்டுள்ளதுடன் அருகில் உள்ள கிணறுகளில் சுத்தமாக நீர் இல்லாத நிலமை ஏற்பட்டுள்ளது. அத்துடன், வெடிச்சத்தம் காரணமாக குழந்தைகளிற்கு செவிட்டுதன்மை குறைபாடு ஏற்படுவதாகவும் கிராம மக்கள் குறிப்பிடுகின்றனர்.

குறித்த பகுதியில் பல வருடமாக வசித்து வருகின்ற மக்கள் தற்காலிக கொட்டில்களில் இருந்த நிலையில் வீடமைப்பு அதிகார சபையால் வழங்கப்பட்ட மாதிரி வீட்டுத்திட்டம் பூர்த்திசெய்யபட்டு சஜித் பிரேமதாசவினால் கடந்த மாதமளவில் திறந்து வைக்கப்பட்டிருந்தது. தற்போது அப் புதிய வீடுகளின் கூரைதகடுகளே கற்கள் விழுந்து சேதமடைந்துள்ளதுடன், அதிஸ்ரவசமாக குழந்தைகள், மற்றும் பொதுமக்களிற்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

No comments