எரியூட்டப்பட்ட நிலையில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!


வவுனியாவில் இளம் குடும்பத்தலைவர் ஒருவர் நேற்றையதினம் காணாமற்போன நிலையில் அவரது சடலம் எரியூட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் உள்ள காட்டில் முச்சக்கர வண்டி ஒன்று தனிமையில் நின்றிருந்த நிலையில், அதனை அவ்வீதியூடாக சென்ற இளைஞர்கள் அவதானித்துள்ளனர். அதன் பின்னர் பற்றைக்குள்ளிலிருந்து அவர் இன்று முற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வவுனியா சின்னப்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த  சுகந்தன் (வயது-27) என்ற  இளம் குடும்பத்தலைவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

கோவில்குளம் சந்தியில் நின்று  முச்சக்கரவண்டி வாடகைக்குச் செலுத்தி வந்த நிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் வவுனியா நகருக்கு பயணித்த நிலையிலேயே காணாமற்போனார் என்று உறவினர்களால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இளம் குடும்பத்தலைவர் இறுதியாக வவுனியா கள்ளிகுளம் பகுதியில் நின்றுள்ளதாக அவரது தொலைபேசி தரவுகள் (ஜிபிஎஸ்) வெளிக்காட்டியுள்ளன. அதனடிப்படையில் முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள், பொலிஸார் முன்னெடுத்த தேடுதலின் அடிப்படையில் கள்ளிக்காடு பகுதியிலிருந்து இளம் குடும்பத்தலைவர் எரியூட்டப்பட்ட நிலையில் சடலமாக காணப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் வவுனியா தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பாக இரு கோணங்களில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments