மீண்டும் கதிரையேற மைத்திரிக்கு விருப்பமாம்?


ஜனாதிபதி தேர்தலின் பின்னர் மீண்டும் பாராளுமன்ற  உறுப்பினராவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஊவா மாகாண ஆளுநராக பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவை நியமித்துவிட்டு டிலான் பெரேராவின் இடத்தினை தான் நிரப்புவதற்கான முயற்சிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது குறித்து தற்போது ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் உறுப்பினராக உள்ள டிலான் பெரேராவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
பொதுஜனபெரமுனவுடன் இணைந்தமைக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கையை டிலான் பெரேரா எதிர்கொண்டுள்ள நிலையிலேயே அவருடன் சிறிசேன பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
சிறிசேனவிற்கும் டிலான் பெரேராவிற்கும் இடையில் இடம்பெற்ற இரண்டு மணிநேர பேச்சுவார்த்தையின் போது சிறிசேன டிலான் பெரேராவிற்கு ஆளுநர் பதவியை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்..
இந்த பேச்சுவார்த்தை குறித்து டிலான் பெரேரா முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு தெரியப்படுத்தியுள்ளார்.
மேலும் இது குறித்து ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் தலைவர் மற்றும் ஜனாதிபதி வேட்பாளருடன் கலந்தாலோசனைகளை மேற்கொள்ளவேண்டும் என டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் டிலான் பெரேரா சிறிசேனவின் வேண்டுகோளை ஏற்பதில்லை என தீர்மானித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை ஊவா மகாண ஆளுநர் மைத்திரி குணரட்ணவை பதவி விலகுமாறு சிறிசேன கேட்டுள்ளார்.அவருடன் சிறிசேன இது குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
எனினும் ஆளுநர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை என மைத்திரி குணரட்ண  தெரிவித்துள்ளார்.

No comments