இந்திய இராணுவத்தின் களுவாஞ்சிகுடி வெறியாட்ட நினைவேந்தல்

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பகுதியில் 1987ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 30 பொதுமக்களின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

குறித்த பொதுமக்களின் நினைவுத் தூபியருகே இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன் தலைமையில் நேற்று (23) நினைவுகூரல் நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு படுகொலைசெய்யப்பட்டவர்கள் நினைவு கூரப்பட்டனர்.

இந்த நிகழ்வில் களுவாஞ்சிகுடி பிரதேச பொதுமக்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

23-10-1987ஆம் ஆண்டு களுவாஞ்சிகுடியில் வைத்து இந்திய படையினரால் பட்டிருப்பு தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவருமான இராசமாணிக்கத்தின் மகனான சக்கரவர்த்தி உட்பட 30 பொதுமக்களை இந்திய இராணுவத்தினர் சுட்டுக்கொலை செய்தனர்.

கண்ணிவெடி தாக்குதல் ஒன்று இந்திய இராணுவத்தினரை இலக்குவைத்து நடத்தியதைத் தொடர்ந்து பொதுமக்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என 30பேர் கொல்லப்பட்டனர்.

இவர்களை நினைவுகூரும் வகையில் களுவாஞ்சிக்குடியில் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் நினைவுத்தூபியொன்று அமைக்கப்பட்டு நினைகூரல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



No comments