சுதந்திரம் அடைய முன்னரே செம்மலை புனித பூமியாக இருந்ததாம்!?

தவேப்பம் மரம் ஒன்றின் கீழ் இருந்த பிள்ளையார் சிலையை மேதாலங்க தேரரே செம்மலை விகாரையில் வைத்தார். இதுவே பிரச்சினைக்கு காரணம். இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னரே செம்மலை புனித பூமியாக இருந்தது. அங்கு ஆயிரம் தூபிகள் இருந்தன என்று ஞானசார தேரர் உரிமை கோரியுள்ளார்.

முல்லைத்தீவு நாயாறு விகாரையின் விகாராதிபதியின் பூதவுடலைத் தகனம் செய்த விடயம் தொடர்பான சர்ச்சைகள் நீடித்துவரும் நிலையில், அதுகுறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று (01) கிருலப்பனையில் உள்ள பொதுபலசேனா அமைப்பின் தலைமைக் காரியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அச்சந்திப்பிலேயே அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.

மேலும்,

முல்லைத்தீவு நாயாறு விகாரையின் விகாராதிபதியின் பூதவுடலைத் தகனம் செய்வது தொடர்பில் நீதிமன்றத்தில் இரு மணித்தியாலங்களுக்கும் மேலாக விசாரணை நடைபெற்ற அதேவேளை, மறுபக்கத்தில் மரணமடைந்த தேரரின் பூதவுடல் அழுகிக்கொண்டிருந்தது. வெகு நேரத்தின் பின்னர் அங்கு பூதவுடலைத் தகனம் செய்வதற்கான பிரதேசத்தைத் தெரிவு செய்யுமாறு தீர்ப்பு வழங்கப்பட்டது. எனினும் அதற்குள் தேரரின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டுவிட்டது.

தற்போது இவையனைத்தும் நடைபெற்று முடிந்துவிட்ட நிலையில், அதனை அப்படியே விட்டுவிட வேண்டும். இவ்விகாரத்தினால் அங்கு தமிழ் - சிங்கள மக்களுக்கு இடையில் எவ்வித முரண்பாடுகளும் வெடிக்கவில்லை, எனவே தேவையின்றிப் போராட்டங்களை நடத்த வேண்டிய அவசியமில்லை. தமிழர்கள் எம்முடன் நெருங்கியத் தொடர்புடன் இருக்கிறார்கள். எமது படங்கள் முதற்கொண்டு அவர்கள் தங்களது வீடுகளில் வைத்துள்ளார்கள்.

இவ்வாறு தமிழர்கள் எம்மீது மிகுந்த அன்போடு காணப்பட்ட நிலையில், ஒரு சிலரது தேவைக்கு இணங்க தற்போது எமக்கெதிரான கோஷங்களை எழுப்பி வருகிறார்கள். இதனையிட்டு, நாம் ஒருபோதும் கோபப்படப்போவதில்லை. தமிழர்கள் தொடர்பாக எமக்கு நன்குத் தெரியும். உண்மையில் இவர்களின் பின்னணியில் ஒருசில மதவாத குழுக்கள் இருப்பதை நாம் நன்றாக அறிவோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேவைக்கு இணங்கவே, தமிழர்களைக் குழப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
தற்போது, இது சர்வதேச ரீதியாகவும் பேசுபொருளாக மாற்றமடைந்துள்ளது. அத்தோடு, பொலிஸாருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றம், நாட்டின் தலைவர்கள், சர்வதேசம் என அனைவருக்கும் பிழையான தகவலொன்றே இந்த விடயம் தொடர்பாக கூறப்பட்டுள்ளது. தங்களது அரசியல் தேவையை பூர்த்தி செய்துகொள்வதற்காகவே, விக்னேஸ்வரன் போன்ற தரப்பினர் இவ்வாறு செயற்படுகிறார்கள். இதற்காகவே, தமிழர்கள் மனங்களின் தேவையில்லாத விஷ விதையை விதைக்கிறார்கள். இதுதொடர்பாக ஏன் யாரும் குரல் கொடுக்கவில்லை?

இங்கு சட்டம் எமக்கு எதிராக மட்டும்தான் செயற்படுகிறது. இங்கு வடக்கு – கிழக்குக்கு ஒரு சட்டமும் ஏனைய பிரதேசங்களுக்கு ஒரு சட்டமும்தான் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இந்த சம்பவத்தை அடுத்து, தமிழர்களின் வாக்குகள் இல்லாது போய்விடுமோ என்று அரசியல்வாதிகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

கஜேந்திரகுமார், விக்னேஷ்வரன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தான் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு இல்லாது போய்விடுமோ என்றுதான் அனைவரும் அஞ்சுகிறார்கள். இந்த கீழ்த்தரமான அரசியல் கலாசாரத்தை நாம் தோற்கடிக்க வேண்டும்.

நாம் கோத்தாபய ராஜபக்ஷவின் பேச்சைக்கேட்டு செயற்படுவதாக கூறுகிறார்கள். கோட்டா ஒன்றும் புத்தர் இல்லை நாம் அவரது பேச்சைக் கேட்க. தமிழர்களுக்கு நாட்டில் எங்கும் வாழ முடியும் என்றால், ஏன் சிங்களவர்களுக்கு அதேபோல் வாழ முடியாது? - என்றார்.

No comments