தாக்குதலில் காயமடைந்தவர் பலி!

யாழில் இனந் தெரியாதோரின் தாக்குதலுக்கு இலக்கான இரும்பக உரிமையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவம் இடம்பெற்று 3 வாரங்களாக சிகிச்சைப் பெற்று வந்த அவர் நேற்று (திங்கட்கிழமை) இரவு உயிரிழந்தார்.
கோண்டாவில் உப்புமடச் சந்தியில் அமைந்துள்ள லக்சுமி இரும்பகத்தின் உரிமையாளர் கந்தையா கேதீஸ்வரன் (வயது -47) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.
எனினும் இந்த சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என உயிரிழந்தவரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
குறித்த பகுதியில் கடந்த செம்டெம்பர் 6ஆம் திகதி மாலை 4 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த சிலர், இரும்பகத்துக்குள் புகுந்து உரிமையாளருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்த இரும்பினால் உரிமையாளரை தாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் படுகாயமடைந்த அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் 24 நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்த அவர், நேற்று இரவு 9.30 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

No comments