ஆஸ்திரேலியாவில் 95 ஆயிரம்+ வெளிநாட்டினர் தஞ்சம்: நெருக்கடியா? நிர்வாக தோல்வியா?
கடந்த 5 ஆண்டுகளில், விமானம் வழியாக ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியுள்ள வெளிநாட்டினரின் எண்ணிக்கை சுமார் 95 ஆயிரத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது. இதனை நெருக்கடியாக சுட்டிக்காட்டும் தொழிலாளர் கட்சியின் (எதிர்க்கட்சி) நிழல் குடியேற்றத்துறை அமைச்சர் கிறிஸ்டினா கெனீஅலே, “உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டனின் திறனின்மை மற்றும் பொறுப்பற்ற தன்மை, ஆட்கடத்தல்காரர்கள் இவ்வாறான கட்டுங்கடங்காத எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதித்துள்ளது,” எனக் கூறியுள்ளார்.
ஆனால், இந்த நெருக்கடி என்பது ஆஸ்திரேலிய அரசின் நிர்வாகத்தோல்வியால் ஏற்பட்டது என ‘தி கான்வர்சேஷன்’ இணையத்தில் வெளியான கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது அகதிகளை பரிசீலிக்கும் முறையில் நிர்வாக ரீதியான குறைபாடு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
பாதுகாப்பு விசா வழங்கும் முடிவுகள் மிகவும் சிக்கலானது. தஞ்சம் கோரி விண்ணப்பிப்பவர்களின் நாட்டின் நிலைமை, தனிப்பட்ட நபர்களின் சூழல்களை ஆராய வேண்டி உள்ளது.
உள்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள கணக்குப்படி, நிரந்தர பாதுகாப்பு விசாவுக்கான பரிசீலணைக் காலம் 257 நாட்கள், அதாவது 8.5 மாதங்களாகும்.
இவ்வாறான தஞ்சக்கோரிக்கை விண்ணப்பங்களை பரிசீலிக்கும் அதிகாரிகள், போதுமான பயிற்சிகளின்றி இருப்பதாகக் கூறப்படுகின்றது.
முதல் கட்ட பரிசீலணையில் எடுக்கப்படும் மோசமான முடிவுகள் மேல் முறையீட்டுக்கு இட்டுச்செல்லும் என்றும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 8,370யாக இருந்த மேல் முறையீடு எண்ணிக்கை 2019ல் 23,063யாக உயர்ந்துள்ளதாகவும் சொல்லப்படுகின்றது.
வான் வழியாக பாதுகாப்பைக் கோரும் அகதிகளை நாம் ஆதரிக்க வேண்டும். அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் மக்கள் ஆஸ்திரேலியாவுக்கு வான் வழியாக வரும் சூழல் இருந்தால், அவர்கள் ஆபத்தான படகு வழி பயணத்தை மேற்கொள்ள மாட்டார்கள் என அக்கட்டுரையில் தெரிவிக்கபப்ட்டுள்ளது.
பணியாளர்களை, நிர்வாகத்திற்கான தேவைகளை முறையாக செய்வதன் மூலம் இந்த சிக்கலை சரி செய்யலாம். இந்த எண்ணிக்கையினால் வான் வழியிலான எல்லை நெருக்கடி எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment