யாழ் மாநகர வரலாறு இரத்தமும் கண்ணீராலும் உறைந்தது - ஆளுநர்

தேர்தல் காலத்திலாவது யாழ்ப்பாணம் மீது கரிசனை காட்டுவதையிட்டு சந்தோசம் அடைகின்றேன் என்று வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகரசபை மண்டபத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மாநகர சபை மைத்தானத்தில் இன்று இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாம் பேச்சை குறைத்து கடினமாக உழைக்க வேண்டும். யாழ்ப்பாண மாநகர சபையின் வரலாற்றினை யாரும் மறக்க முடியாது. அது மறக்கக் கூடிய வரலாறு அல்ல. ஏனெனில் அது மக்களின் கண்ணீரிலும் இரத்தத்தினாலும் உறைந்துள்ளது. இப்போது அழிந்த மாநகர சபை மண்டபம் மீண்டும் கட்டியெழுப்படவுள்ளது.இது அபிவிருத்தியில் ஓர் வரலாற்றுத் திருப்பு முனை என்று கூறலாம்.

யாழ்ப்பான மாநகர சபை இலங்கை சுதந்திரம் அடைந்து ஒரு வார காலத்திலேயே உருவாக்கப்பட்டுவிட்டது. அப்போதிலிருந்தே இயங்கி வந்தது. எனவே இந்த கட்டிடம் அமையப்பெறுவது யாழ்ப்பாணத்தின் அபிவிருத்திப் பயணத்தில் புதிய திருப்பு முனையாக அமைய வேண்டும்.

தேர்தல் காலத்திலாவது யாழ்ப்பாணம் மீது கரிசனை காட்டுவதையிட்டு சந்தோசம் அடைகின்றேன். வெறுமனே சின்னமாக இருக்காது எமது அடிப்படை அரசியல் சிந்தனைகளை மாற்றக் கூடிய வகையில் அமைய வேண்டும்.

வெறுமனே இந்த கட்டிடத்தை கட்டி முடிப்பதுடன் மட்டுமல்லாது வடக்கு மாகாண மக்களுக்கு அதிலும் குறிப்பாக யாழ்ப்பான மக்களுக்கு ஜனாயகத்தை கட்டிஎழுப்பும் கேந்திர நிலையமாக யாழ் மாநகர சபை மண்டபம் அமைய வேண்டும் என்றார்.

No comments