தமிழர்களை கொன்று குவித்த கோத்தாவை சுதந்திர கட்சி ஆதரிக்காதாம்!

தமிழர்களை கொன்று குவித்த கோட்டாபய ராஜபக்ச அவர்களுக்கு ஒரு போதும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவு வழங்காது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார்.
ஹட்டனில் நேற்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும்,
கோட்டாபய ராஜபக்ச போட்டியிட்டாலும் கூட சிறுபான்மை மக்களுடைய வாக்குகளை அவருக்கு பெற்றுக்கொள்வதில் ஒரு சிக்கலான நிலை காணப்படுகின்றது. காரணம் கடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்தம், வெள்ளை வேன் கடத்தல்கள் போன்ற பல்வேறு செயற்பாடுகள், குற்ற செயல்கள் அவர் மீது காணப்படுகின்றது.
இந்த நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவர்கள் 70 வீதமான தமிழ், மூஸ்லிம் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் கோட்டாபய ராஜபக்சவிற்கு தமிழ், முஸ்லீம் மக்கள் ஒரு போதும் வாக்களிக்க போவதில்லை. எனவே அவர் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியே சந்திப்பார்.
அத்தோடு, தமிழ் மக்களின் வாக்குகளை சிதைவடிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் சில சூழ்ச்சியான காரியங்களை செய்து வருகின்றமை இங்கு தெளிவாக தெரிகின்றது.
ஜனாதிபதியை தீர்மானிப்பதற்கு வட, கிழக்கோடு இணைந்து மலையகத்தில் இருக்கின்ற தமிழ் மக்களின் வாக்குகளும் தேவைப்படுகின்றது. ஆகையால் தமிழ் மக்களின் வாக்குகளை சிதைவுப்படுத்துவதற்காக தமிழ் மக்களின் வாக்குகள் இரண்டு பெரும்பான்மை தரப்புகளுக்கும் செல்லாமல் தடுப்பதற்காக அவர் சீ.வீ.விக்னேஷ்வரனை களமிறக்குவதற்கான மறைமுகமான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்.
தேர்தலில் போட்டியிட்டாலும் கூட வெற்றிப்பெற போவதில்லை என்று சீ.வீ.விக்னேஷ்வரனுக்கு நான்றாக தெரியும். ஆனால் அவர் இந்த தமிழ் மக்களை காட்டிக் கொடுப்பதற்காக இந்த நாட்டில் முறையான ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வதை தடுப்பதற்கான ஒரு விடயத்திலேயே அவர் தனது அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றார். எனவே அவர் சிந்தித்து செயற்பட வேண்டும் என நான் தெரிவுக் கொள்கின்றேன்.
மேலும், ஜனாதிபதி வேட்பாளராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் களமிறக்கப்பட்டிருக்கின்ற முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச அவர்கள் இலங்கை பிரஜா உரிமையை பெற்றிருக்கின்றாரா அல்லது அமெரிக்கா பிரஜா உரிமையை ரத்து செய்துருக்கின்றாரா என்பது தொடர்பில் ஒரு சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
ஊடகங்கள் வாயிலாக அவர் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார். நான் அமெரிக்கா பிரஜா உரிமை ரத்து செய்து முற்று முழுதாக இலங்கை பிரஜையாக தான் இந்த தேர்தலில் களமிறங்குகின்றேன் என்கிறார்.
ஆனால் அமெரிக்கா அவரின் பிரஜா உரிமையை நீக்கியதற்கான எந்தவிதமான ஒரு தகவல்களையும் வெளியிடவில்லை.
எனவே இரட்டை பிரஜா உரிமையை கொண்ட ஒருவர் எவ்வாறு இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்க முடியும் அல்லது ஜனாதிபதியாக தெரிவு செய்ய முடியும் என்பது தொடர்பில் ஒரு சிக்கல் நிலை தோன்றுகின்றது.
எனவே அமெரிக்கா பிரஜா உரிமையை ரத்து செய்வதற்கு முன்பதாகவே அவர் கடந்த காலங்களில் இலங்கையில் இடம்பெற்ற தேர்தல்களில் வாக்களித்திருக்கின்றார். அவர் எவ்வாறு வாக்களித்தார் என்பது ஒரு சட்டத்திற்கு புறம்பான செயற்பாடகவே இருக்கின்றது.
கோட்டாபய ராஜபக்ச அவர்கள் இந்த தேர்தலில் களமிறங்க முடியாது என்பதை நாங்கள் தெரிவிக்கின்றோம்.
அத்தோடு, கோட்டாபய ராஜபக்ச அவர்களுக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஒருபோதும் ஆதரவு அளிக்கப்போவதில்லை.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அதி கூடிய ஜனாதிபதிகளையும், பிரதமர்களையும் உருவாக்கிய பலம் பொருந்திய ஒரு கட்சி. தமிழ், சிங்கள, மூஸ்லீம் ஆகிய மூவின மக்களையும் உள்வாங்கி இலங்கையில் ஒரு சமத்துவத்தை உருவாக்கி இன, மத, மொழி பேதமின்றி சமத்துவத்தோடு ஒரு ஆட்சியை கொண்டு நடத்திய கட்சி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகும் என்றார்.

No comments