மஹிந்தவை சந்தித்தது யார்: மண்டை குழம்பிய தமிழரசு!


மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் சிலர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைச் சந்தித்துள்ளமை தொடர்பில் கூட்டமைப்பினுள்ளேயே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அவரைச் சந்தித்தவர்கள் எவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் அல்ல என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் இன்று தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைச் சந்தித்துள்ளதாக புகைப்படத்துடன் கூடிய செய்தியொன்று வெளியாகியுள்ளது. இப்புகைப்படத்தில் உள்ளவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவ்வகையிலே இச்செய்தி ஒரு பிழையான செய்தியாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இவ்வாறானதொரு பிளவுகள் ஏற்பட்டுள்ளன என்கின்ற செய்தி ஒரு முக்கியத்துவம் பெறக்கூடிய செய்திதான். ஆனால், இந்தச் செய்தி பலரையும் ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளதே தவிர எவ்வித உண்மைத் தன்மையும் கொண்டதல்ல. அந்தவகையில் வருகை தந்தவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களே என நம்பிக்கொண்ட மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளார். அத்தோடு மட்டுமல்லாது அவர்களை சந்தித்துக் கலந்துரையாடிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இதற்குமேலாக ஏமாற்றப்பட்டுள்ளார். இதை விட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த இத்தனை உறுப்பினர்கள் கட்சிக்குத் தெரியாமல் மஹிந்த அவர்களைச் சந்தித்துவிட்டார்கள் என்பதை நம்பிக் கொண்டு உண்மையில் அவ்வாறானதொரு நிகழ்வு நடைபெற்றிருந்தால் எவ்வித முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்குமோ அதே முக்கியத்துவத்தைக் கொடுத்து அந்தச் செய்தியை வெளியிட்டுள்ள ஊடகங்களும் உண்மையில் ஏமாற்றப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் கடைசி வரை சந்திப்பில் பங்கெடுத்தவர்கள் யாரென்பதை அவர் வெளிப்படுத்தியிருக்கவில்லை.

No comments