திறந்தால் முடக்கும் போராட்டம்?


சர்வதேசத்தையும், தமிழ் மக்களையும் ஏமாற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் கிளை யாழ்ப்பாணத்தில் திறக்கப்படகூடாது என்று வட,கிழக்கு மாகாணங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

அவ்வாறு அந்த ஏமாற்று அலுவலகம் யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட்டால் அதற்கு எதிராக பாரிய போராட்டங்களை முன்னெடுப்போம் என்றும் அவர்கள் மேலும் எச்சரிக்கை செய்துள்ளனர்.


யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

இவ்விடயம் தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்தின் பிராந்திய அலுவலகங்களை திறப்பதற்கு நாம் எதிர்ப்பு தெரிவித்தோம். அதை ஏற்றுக்கொண்ட ஆணையாளர் பிராந்திய அலுவலகங்களை திறக்கமாட்டோம் என கூறியிருந்தார்.

இந்த அலுவலகத்தினால் எந்த பலனும் கிடையாது என்பதாலேயே எதிர்த்து வருகிறோம். இந்த நிலையில் வரும் 24ம் திகதி யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான அலுவலகம் திறக்கப்படவுள்ளது. இதற்கு நாம் எதிர்ப்பை தெரிவிக்கிறோம்.
அதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவோம். அரசியல்வாதிகளும் எமது போராட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும். எதிர்வரும் 30ம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான தினத்தில் வடக்கு, கிழக்கில் போராட்டங்களை செய்ய தீர்மானித்துள்ளோம்.
முள்ளிவாய்க்காலில் உறவுகளை இராணுவத்திடம் கையளித்த இடத்திலும், கல்முனையிலும் போராட்டத்தை நடத்தவுள்ளோம். இதில் அரசியல்வாதிகள், பொதுஅமைப்புக்கள், மக்கள் கலந்து கொண்டு ஆதரவளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

No comments