சவேந்திரசில்வா விவகாரம் விடாப்பிடியாக அமெரிக்கா?


இலங்கையின் உள்நாட்டு அலுவல்களில் தலையிடவேண்டாமென ரணில் அரசு எச்சரித்துள்ளநிலையில் இராணுவதளபதியாக யுத்த குற்றச்சாட்டுகளிற்கு உள்ளாகியுள்ள சவேந்திரசில்வா நியமிக்கப்பட்டுள்ளதால் இலங்கையுடனான அமெரிக்காவின் பாதுகாப்பு ஒத்துழைப்புகள் பாதிக்கப்படலாம் என அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
சவேந்திர சில்வாவின் நியமனம் நல்லிணக்க முயற்சிகளிற்கு நிரந்தரமான தாக்கத்தை செலுத்தும் என இராஜாங்க திணைக்கள அதிகாரி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கடுமையான அரசியல் சூழ்நிலையில் தேசிய உணர்வுகளை பயன்படுத்தினால் நன்மையடையலாம் என சில தரப்பினர் கருதுகின்றனர் என அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.
தெளிவான நன்கு ஆவணப்படுத்தப்பட்ட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் உள்ள ஜெனரலிற்கு பதவி உயர்வு வழங்குவதன் மூலம் தேசிய உணர்வை பயன்படுத்த முயல்வது  துரதிஸ்டவசமானது எனவும் அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.
இராணுவ தளபதி மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர் என்றால் இலங்கையுடன் வலுவான  இராணுவ உறவுகளை வலுப்படுத்தும் எங்கள் முயற்சிகள் மட்டுப்படுத்தப்படலாம் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு மூதலீடுகள் பாதிக்கப்படலாம் எனவும் அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரி எச்சரித்துள்ளார்.
இலங்கை சமூகத்தி;ல் துருவமயப்படுத்தலிற்கு வழிவகுக்க கூடிய சூழல் காணப்படுவதாக முதலீட்டாளர்கள் கருதினால் அவர்கள் முதலீடு செய்வதற்கு தயங்கலாம் எனவும் அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.
சவேந்திர சில்வாவின் நியமனத்தினால் மில்லேனியம் சலஞ்ச் ஒத்துழைப்பு மூலம் வழங்கப்படுகின்ற நிதிஉதவிக்கும் பாதிப்பு ஏற்படலாம் என அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.

No comments