பனை தறிக்கின்றது இராணுவம்?


வடமராட்சி கிழக்கு பிரதேசத்துக்குட்பட்ட மண்டலாய் பகுதிற்கு கிழக்குப்பக்கமாக உள்ள இராணுவ முகாமுக்கு மிகவும் அண்மையில் பல நூற்றுக்கணக்கான பனைமரங்கள் தறிக்கப்பட்டு காணப்படுகின்றன.இன்றைய தினம் சட்டவிரோதமான பனைமரங்கள் தறிக்கப்படுகிறது என கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கிராமசேவையாளர் மற்றும் பொது அமைப்பு பிரதிநிதிகள் குறித்த இடத்திற்கு சென்ற போது இராணுவ முகாமிற்கு மிகவும் அருமையாக பல மரங்கள் பனை மரங்கள் தறிக்கப்பட்டு காணப்படுகின்றன.
அங்கு பிரசன்னமாகியிருந்த ராணுவத்தினரும் மற்றும் இராணுவ போலீஸ் ஆகியோர்  இவ்விடத்திற்கு யார் உங்களை உள்ளே அனுமதித்தது எனவும் இவ்விடம் கண்ணிவெடி அகற்றப்படாத பிரதேசம்  இங்கே யாரும் வரக்கூடாது என்று மிரட்டும் தொனியில் தெரிவித்தனர். தறிக்கப்பட்டு தோல் சீவப்பட்டு வீட்டுத் தேவைகளுக்காக தயார்படுத்தப்பட்ட நிலையில் காணப்பட்ட பனைமரங்களை புகைப்படம் எடுப்பதற்காக வடமராட்சி கிழக்கு பிரஜைகள் குழுவின் செயலாளர் செல்வராசா உதயசிவம் மிரட்டப்பட்டு அவரது தொலைபேசி பறிக்கப்பட்டு படங்கள் அனைத்தும் அழிக்கப்பட்ட பின்னர் தொலைபேசி மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 
இது தொடர்பாக பெயர் குறிப்பிட விரும்பாத பலரும் கருத்துத் தெரிவிக்கும் போது வெற்றிலைக்கேணிப் பகுதியில் நீண்ட காலமாக தனியார் ஒருவர் இராணுவம் மற்றும் போலீசாரால் செல்வாக்குடன் பனை மரங்களை தறித்து விற்பனை செய்து வருவதாகவும் இந்த பகுதிக்கு பொதுமக்கள் யாரும் செல்ல முடியாதவாறு இராணுவம் தடுத்து வைத்துள்ள நிலையில் குறித்த நபர் சென்று எவ்வாறு இவ்வளவு பனை மரங்களையும் தயாரித்து ஏற்றுமதி செய்து விற்பனை செய்கிறார் என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தற்போது இராணுவ முகாமுக்கு அருகில் தறித்து தோல் சீவப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ள பனைமரங்களை பிரதேச செயலகம் பொறுப்பெடுத்து அவற்றைக் கொண்டு செல்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கொண்டிருக்கின்றன

No comments