நானும் சளைத்தவனல்ல:சுவாமிநாதன்?

மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் வெள்ளவத்தை மயூராபதி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவிலிடமிருந்து 20 மில்லியன் ரூபா தொகையை கடனை பெற்றுள்ள நிலையில், குறித்த கடன்  தொகையை மீண்டும் திருப்பி செலுத்தாமையின் காரணமாக ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவில் அறங்காவலர்கள் நிதி குற்றப் புலனாய்வு பிரிவில் (FCID) முறைப்பாடு செய்துள்ளனர்.
சுவாமிநாதனுக்கு சொந்தமான ஸ்ரீ பொன்னம்பல வாணேஸ்வரர் கோவில் திருமண மண்டபத்தை  கட்டுவதற்காக 2014 அக்டோபர் 10 ஆம் திகதி  இந்த கடன் பெறப்பட்டுள்ளது.
பத்து மாதங்களுக்குள் கடனை திருப்பித் தருவதாக சுவாமிநாதன் உறுதியளித்துள்ள நிலையில் அவர் அதனை செலுத்த தவறியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த மார்ச் 20ம் திகதி மயூராபதி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவில் அறங்காவலர்  பி.சுந்தரலிங்கம், டி.எம் சுவாமிநாதனுக்கு குறித்த கடன்தொகையை மார்ச் மாதம் 31ம் திகதிக்குள் செலுத்துமாறு தெரிவித்து கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
இருப்பினும், திரு. சுவாமிநாதனின் தரப்பு அதைப் புறக்கணித்துள்ளது.
மீண்டும் ஏப்ரல் 10ம் திகதி மயூராபதி கோவிலினால்  சுவாமிநாதனுக்கு நினைவூட்டல் கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.
அதன்படி, சுவாமிநாதனின் வழக்கறிஞர் கபில மானவசிங்க  சரத்சந்திர கடந்த மே மாதம் 10 ஆம் திகதி  மயூராபதி கோவில் அறக்கட்டளையின் தலைவர் சுந்தரலிங்கத்திற்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார். 
பணம் செலுத்துவதைக் குறிக்கும் இரண்டு கடிதங்களையும் தள்ளுபடி செய்யுமாறு தனது வாடிக்கையாளரிடமிருந்து அறிவுறுத்தல்களைப் பெற்றதாக வழக்கறிஞர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தனது வாடிக்கையாளர் மீது ஏதேனும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டால், மயூராபதி கோவில் அறக்கட்டளை  மீது வழக்கு தொடரப்படும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மயூராபதி கோவிலினால்  சுவாமிநாதனுக்கு  கொடுத்த காசோலைகளின் பிரதிகள் இருந்தபோதிலும் சுவாமிநாதன்  கடனாக குறித்த தொகையை பெறவில்லை குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக மயூராபதி கோவில் அறங்காவலர்களால்  நிதி குற்றப் புலனாய்வு பிரிவுக்கு இது தொடர்பாக புகார் அளித்ததால் சுவாமிநாதன் பதற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments