தயாராகின்றது நீராவியடி?



தமிழர் பிரதேசங்களை சிங்கள மயமாக்கும் இரகசியத்திட்ட நோக்கத்துடன் பௌத்த தேரர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் முல்லைத்தீவு - பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் இருப்பையும், எமது நிலவுரிமையையும் உறுதிப்படுத்தி ஆலயத்திற்கான தமிழ் மக்களின் ஆதரவுப் பலத்தினை ஆக்கிரமிப்பாளர்களுக்கு காண்பிக்கும் முகமாக "தமிழர் திருவிழா" எனும் தொனிப்பொருளில் நாளை மறுதினம் (06) அதே ஆலயத்தில் 108 பானைகளை வைத்து பொங்கல் விழாவை முன்னெடுக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி அன்றைய தினம், சிங்கள பௌத்த மயமாக்கலினால் பறிபோய்கொண்டிருக்கும் எல்லைக் கிராமமான கொக்குத் தொடுவாயின் வரலாற்று சிறப்புமிக்க கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு பாரம்பரிய மடப்பண்டமெடுத்தலும் "108" பானைப் பொங்கலும் இடம்பெறவுள்ளது.
இந்தத் தமிழர் திருவிழாவான "108" பானைப் பொங்கல் விழாவினை ஆலய அறங்காவலர் குழுவுடன் இணைந்து சமூக வலைத்தள நண்பர்கள் ஒழுங்கமைத்து முன்னெடுக்கவுள்ளனர்.
மடப்பண்டமெடுப்பின் போது அவ்வாலயம் சார்ந்த மக்களும் அதன்பின்னர் இடம்பெறும் பொங்கலின் போது காலை 10.30 மணிக்கு ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான மக்கள் பலத்தை காண்பிக்கும் வகையில் இளைஞர்கள், யுவதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள், அரசியல்ப் பிரமுகர்கள் மற்றும் மதத் தலைவர்கள் உள்ளிட்டோரை மதங்களை கடந்து நில ஆக்கிரமிப்புக்கு எதிரான உணர்வுள்ள தமிழர்களாய் ஒன்றிணையுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதேவேளை, இந்தப் பொங்கலுக்கு வருகை தரும் மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம், திருகோணமலை, மன்னார், கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் இருந்தும் பேருந்துகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

No comments