நுவரெலியாவில் ஜ.எஸ் பயிற்சி முகாம்?


நுவரெலியாவிலும் ஜஎஸ் அமைப்பு ஆயுதபயிற்சி மையங்களை பேணியதான குற்றசசாட்டுக்களின் மத்தியில் தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானியாக மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

புலனாய்வு பிரிவின் பிரதானி சிசிர மெண்டிஸ் பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு இந்த நியமனம் வாங்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னைலையில் சாட்சியமளித்ததை அடுத்து புலனாய்வு பிரிவு பிரதானி சிசிர மெண்டிஸ் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
இதனிடையே கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்டவர் நுவரெலியாவிலுள்ள முகாமில் பயிற்சிப் பெற்றவரென குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்டவர் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தாக்குதலை நடத்தியவர், 2014ஆம் ஆண்டிலிருந்து தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பில் இணைந்து செயற்பட்டமை தெரியவந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பயங்கரவாதி உட்பட மேலும் சிலர் எந்தேரமுல்ல மற்றும் நிந்தவூர் ஆகிய பிரதேசங்களில் வாழ்ந்து வந்துள்ளனரென்றும் இவர்கள் நுவரெலியாவில் அமைந்துள்ள முகாமில் ஆயுதப் பயிற்சி பெற்றுள்ளதாவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்த கொழும்பு கோட்டை நீதிமன்றத்தின் பதில் நீதவான், சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி அது தொடர்பில் எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்தார்.

No comments