மோடி-மைத்திரி பேச்சு:இந்திய மீனவர்கள் விடுதலை!


இலங்கை ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமரது சந்திப்பில் எட்டப்பட்ட முடிவின் பிரகாரம் யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 18 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை நீதவான் நளினி கந்தசாமி முன்னிலையில் மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, குறித்த மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டனர் என, கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவி பணிப்பாளர்  குறிப்பிட்டார்.

எனினும், மீனவர்களின் மூன்று படகுகள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

சட்ட மா அதிபரின் பரிந்துரைக்கு அமைய, குறித்த மீனவர்கள் தொடர்பில் கடற்றொழில் திணைக்களத்தால், இன்று நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மீனவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காது அவர்களை விடுதலை செய்யுமாறு சட்ட மா அதிபர் பரிந்துரை செய்திருந்ததாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவி பணிப்பாளர் கூறினார்.

அதற்கமைய, பருத்தித்துறை நீதவான் இந்திய மீனவர்கள் 18 பேரையும் விடுதலை செய்துள்ளார்.

பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் காரைக்கால் பகுதியை சேர்ந்த 18 மீனவர்களும் மூன்று படகுகளுடன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இலங்கை ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமரது சந்திப்பின்போது கைதாகும் இருநாட்டு மீனவர்களையும் விடுவிப்பதென் தீர்மானிக்கப்பட்டமை தெரிந்ததே.

No comments