றிசாத் கேட்கவில்லை:இராணுவ தளபதி பல்டி!


முன்னாள் அமைச்சர் றிசாத் தொடர்பில் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை இராணுவத்தளபதி பல்டி அடித்து இன்று மறுதலித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களின் பின்னர், கைதுசெய்யப்பட்டுள்ள நபர்கள் குறித்து, முன்னாள் அமைச்சர் ரிஷாட் தனக்கு எவ்வித அழுத்தங்களையும் விடுக்கவில்லை என்றும் இராணுவத் தளபதி மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி இஷான் அஹமட் என்ற நபர் தெஹிவளைப் பிரதசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டதன் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் தொலைபேசி ஊடாக 3 தடவை தன்னை அழைத்து, இஷான் அஹமட் என்ற நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மாத்திரமே தன்னிடம் வினவியதாகவும்   தெரிவித்துள்ளார்.

இதனிடையே இன்று வாக்குமூலமளிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் சாட்சியமளிப்பதற்காக, இன்று தெரிவுக்குழுவில் முன்னிலையானாலும், தெரிவுக்குழுவின் கோரிக்கைக்கமைய, இவரது விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் 28ஆம் திகதி ரிஷாட் பதியூதீனிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுமென தெரிவுக்குழு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் முதலாவதாக, இன்றைய தினம் இராணுவத் தளபதி மஹேஸ் சேனாநாயக்கவின் சாட்சியங்கள் பெறப்பட்டிருந்தன.

இதன் பின்னர், வர்த்தக அமைச்சின் செயலாளர் கே.டீ.என்.ஆர். அசோக்க, தொழிற்றுறை அபிவிருத்தி சபையின் நிறைவேற்றதிகாரி டீ.எல்.யூ. ரன்னமலல ஆகியோரின் சாட்சியங்களும் இன்று பதிவு செய்யப்பட்டன.

எனினும் மாலை 5 மணியளவில் விசாரணைகளுக்காக அமைச்சர் ரிஷாட் பதியூதீன் நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வருகைத் தந்த போதிலும் விசாரணைகள் 28ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறும் என்று தெரிவுக்குழு உறுப்பினர்கள் அறிவித்ததால், நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

No comments