றிசாத்திற்கு எதிராக கூட்டமைப்பும் கைகோர்க்கின்றது!


இலங்கை அமைச்சர் றிசாத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு கூட்டமைப்பும் ஆதரவளிக்கவுள்ளது.இதனை புளொட் தலைவர் சித்தார்த்தன் தனது நெருங்கிய தரப்புக்களிடம் தெரிவித்துள்ளார்.

றிசாத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு திரட்டப்பட்டுவருகின்ற நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க அமைச்சர் ரிசாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தது உண்மையே. ஆனால் அவரது கோரிக்கையை நான் ஏற்கவில்லை. இரண்டரை ஆண்டுகள் கழித்து மீண்டும் தொலைபேசியில் அழையுங்கள். அப்போது பார்க்கலாம் என்று கூறிவிட்டேன் என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக தெரிவித்துள்ள கருத்து தெற்கில் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

அமைச்சர் என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு கைதுசெய்யப்பட்டுள்ள நபர் இன்னாரின் உறவினர், இவர்கள் எல்லாம் அவருக்கு வேண்டப்பட்டவர்கள், ஆகவே அவரை விடுதலை செய்ய முடியுமா என கோரிக்கை ஒன்றினை முன்வைத்தார்.முதலில் எனக்கு கைதுசெய்யப்பட்ட நபர் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. பின்னர் இரண்டாவது தடவையும் தொடர்புகொண்டு என்னுடன் இந்த விபரங்கள் குறித்து பேசினார். மூன்றாவது தடவையும் அமைச்சர் தொலைபேசியில் தொடர்புகொண்டு குறித்த நபரை விடுவிக்க கோரிக்கை விடுத்தார்.

இரண்டாவது தடவை கோரிக்கை விடுத்த பின்னரே, அவரை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டேன். அமைச்சர் மூன்றாவது தடவையும் அழைத்தபோது, இன்னும் இரண்டரை ஆண்டுகள் கழித்து எனக்கு மீண்டும் தொலைபேசியில் அழையுங்கள். அப்போது உங்களின் கோரிக்கையை நான் ஆராய்கின்றேன் என்று கூறி தொலைபேசியை துண்டித்துவிட்டேன் என தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து றிசாத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு திரட்டும் தரப்புக்கள் வலுத்துள்ளன.இந்நிலையில் கூட்டமைப்பும் இணையலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments