மீண்டும் மிரட்டுகின்றது இராணுவம்?


மன்னார் பகுதியில் அமைந்துள்ள மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினுள் இன்று வியாழக்கிழமை மாலை திடீர்  புகுந்த படையினர் சோதனையினை நடத்தியுள்ளனர்.இதனிடையே படையினர்  நிறுவனத்தை முழுவதுமாக சோதனைக்கு உட்படுத்தியதுடன் படைத்தரப்பு அதிகாரி ஒருவர் அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

நிறுவனத்தின் செயற்பாடு தொடர்பாகவே இராணுவ அதிகாரி அச்சுறுத்தல் விடுத்ததாகவும்  மன்னார் மனித உரிமைகள்  ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செயயப்பட்டுள்ளது.

இன்று வியாழக்கிழமை மாலை 3.30 அளவில் திடீரென நிறுவனத்திற்குள் புகுந்த 50க்கும் மேற்பட்ட படையினர் நிறுவனம் முழுவதையும் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

நிறுவனமானது தொடர்ச்சியாக வடக்கு மாகாணத்தில் காணி தொடர்பாகவும் விவசாயம் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாகவும் மக்கள் மத்தியில் பணியாற்றி வருகின்றது.

சோதனைக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கப்பட்ட போதும் படை  அதிகாரி ஒருவர் அநாகரிகமாக அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்பட்டமை தொடர்பில் முறையிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் படை அதிகாரியினால்  நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த  சி.சி.ரீவி கெமராவும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து மனித உரிமை ஆணைக்குழு உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

No comments