மன்னிப்புக் கோரிய ரணில்

”நான் நாட்டின் பிரதமர் எனும் அடிப்படையில் நாட்டில் இடம்பெற்ற சம்பவங்களுக்கான கூட்டுப் பொறுப்பினை ஏற்றுக் கொள்கின்றேன். அரசாங்கம் எனும் ரீதியில் இக்குறைபாடு தொடர்பில் நான் உண்மையாகவே எமது மக்களிடத்தில் எனது வருத்தத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன்.” – என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையிலேயே இந்த விடயத்தில் குறிப்பிட்டார். அவரது உரை வருமாறு,
உயிர்த்த ஞாயிறன்று நாங்கள் முகங்கொடுத்த பயங்கரவாத தாக்குதலின் தாக்கம் இன்னும் குறைவடையவில்லை.

எமதுநாட்டினை இரத்த ஆறாகமாற்றவேண்டும் என்பதே இக்கொடூரதாக்குதலினை திட்டமிட்டவர்களின் நோக்கமாக அமைந்திருந்தது. எனினும் எமதுமக்கள் பிரிவுகளுக்கு இடையில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்காது சட்டத்தினையும்  ஒழுங்கினையும் பாதுகாப்பதற்கு நாம் அனைவரும் முன்னின்று செயற்பட்டோம்.

எமது பேராயர்   உட்பட கிறிஸ்தவ மததலைவர்கள், மகாநாயக்கதேரர்கள் உட்பட மகாசங்கத்தினர், இஸ்லாம் மற்றும் இந்து மதத் தலைவர்கள்,சிவில் அமைப்புகள்,கிராமியதலைவர்கள் என அனைவரும் இணைந்து முழு இலங்கையிலும் சமாதானத்தினையும், நல்லிணக்கத்தினையும் ஏற்படுத்துவதற்கு அர்ப்பணித்தனர்.

முஸ்லிம் மக்கள் சமாதானத்தினை ஏற்படுத்துவதற்காக நடவடிக்கைகளை  மேற்கொண்டனர். காவல் துறையினர் உட்பட பாதுகாப்புதரப்பினருக்கு பொது மக்கள் தமது பூரண ஒத்துழைப்பினை வழங்கினர்.
முதலில் இவ்வனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

எமது சகோதர சகோதரிகள் ,பிள்ளைகள் எனபலர் இந்ததாக்குதலில் உயிரிழந்தனர்.
வெளிநாட்டவர்கள் பலரும் உயிரிழந்தனர். இதில் சிலவெளிநாட்டவர்கள் எமது நாட்டுக்கு உதவிஒத்தாசைகளை வழங்குவதற்கு வருகைதந்தவர்கள் ஆவர். இன்னும் சிலர் எமதுநாட்டின் இயற்கை அழகைகண்டுகளிப்பதற்கு வந்தவர்கள் ஆவர்.

தற்போது பதிவாகியுள்ள உயிரிழப்புகள் தொடர்பில் கணக்கிடப்பட்டு வருகின்றது. உயிரிழந்த அனைவருக்காகவும் முழு இலங்கையர்களும் கவலைப்படுகின்றனர். அதிர்ச்சியடைகின்றனர். தற்போது 149 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் நாம் பூரணசுகமடையபிரார்த்தனை செய்கின்றோம்.

இறுதிச் சடங்குகளுக்காகவும், உயிரிழப்புகளுக்காகவும் ஆரம்பத்தில் ஒரு இலட்சம் ரூபாவினையும், பின்னர் நட்டஈடாக மேலும் ஒன்பது இலட்சம் ரூபாய்களையும் வழங்குவதற்குஅரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நாம், இழந்த உயிர்களை பணத்தினால் மதிப்பிட்டு விடமுடியாது. எனினும் இந்த சந்தர்ப்பத்தில் ஏதேனுமொரு ஒத்துழைப்பாகவும்  உதவியாகவுமே இந்த பணத்தினை நாங்கள் வழங்குகின்றோம். பாதிப்புக்குள்ளான தேவாலயங்கள் மூன்றினையும் மீண்டும் புனர்நிர்மாணம் செய்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கைஎடுக்கும் - என்றார்.

No comments