மண்டைதீவில் மக்கள் போராட்டம்!


யாழ்ப்பாணம் மண்டைதீவில் உள்ள கடற்படை முகாம் காணியை நிரந்தரமாக சுவீகரிக்கும் நோக்கத்துடன், இன்று காலை 9 மணிக்கு நிலஅளவைத் திணைக்களம் அளவீடு செய்ய முற்பட்டிருந்த நிலையில் அதன் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

அளவீட்டை நடத்த விடாமல் எதிர்ப்பு தெரிவிக்க இன்று காலையிலேயே மணடைதீவு கடற்படை முகாமிற்கு முன்பாக மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு நடவடிக்கைக்களில் குதித்திருந்தனர்.

மண்டைதீவில் உள்ள கடற்படை தளம், 18 ஏக்கர் தனியார் காணிகளையும் சுவீகரித்து அமைக்கப்பட்டுள்ளது. அந்த காணிகளிலேயே மண்டைதீவின் குடிநீர் கிணறுகளும் வளமான நிலமும் அமைந்துள்ளன. அவற்றை நிரந்தரமாக சுவீகரிப்பதற்காக, காணிகளை அளவீடு செய்யும் பணிகள் இன்று நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சுவீகரிப்பு நடவடிக்கைளை நிறுத்தும்படி ஜனாதிபதி, பிரதமரிடம் கூட்டமைப்பினர் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தனர். எனினும், அந்த கோரிக்கை கணக்கிலெடுக்கப்படாமல் இன்று அளவீட்டு பணிகள் நடக்க ஏற்பாடாகியிருந்தது.

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திலும் காணி சுவீகரிப்பிற்கு எதிரான தீர்மானம் எடுக்கப்பட்டது. எனினும், மேலிட உத்தரவில்லாமல் அளவீட்டு பணிகளை நிறுத்த முடியாதென, நிலஅளவை திணைக்களத்தின் யாழ் மாவட்ட அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று அளவீட்டு பணிகளிற்கென வந்திருந்த அளவைத்திணைக்களத்தினர் பணியினை முன்னெடுக்கவிடாது போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

No comments