வடக்கு மக்கள் ஆதரவுடன் ஜனாதிபதியாகுவோம் - பசில்

மஹிந்த ராஜபக்சவால் முன்மொழியப்படும் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிபந்தனையற்ற ஆதரவை வழங்கும் என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.
களுத்துறையில் இன்று ( 09) நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
” எதிர்வரும் டிசம்பர் 7 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடப்படவேண்டும். அத்தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் களமிறங்கும் வேட்பாளர் டிசம்பர் 9 ஆம் திகதியாகும்வரை இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்பார்.
ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற விடயத்தில் எம்மிடையே ( கூட்டு எதிரணிக்குள்) கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக சிலர் குறிப்பிடுகின்றனர். அவ்வாறு எந்த முரண்பாடும் இல்லை.  மஹிந்த ராஜபக்சவால் முன்மொழியப்படும் வேட்பாளருக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவோம்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாடு வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் பலப்படுத்தப்படும். வடக்கு, கிழக்கு மக்களையும் இணைத்துக்கொண்டு – அவர்களின் அமோக ஆதரவுடன் தேர்தலை சந்திப்போம்.” என்றும் பஸில் கூறினார்.

No comments