கூட்டமைப்பு சாதனை:அம்மாச்சி:வன்னி அறுசுவையானது !


வடமாகாணசபையால் அம்மாச்சியெனும் பேரில் ஆரம்பிக்கப்பட்ட பாரம்பரிய உணவகத்தை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வவுனியா வடக்கு பிரதேச சபை வன்னி அறுசுவையாக மாற்றியுள்ளது.

அத்துடன் வவுனியா வடக்கு பிரதேசசபையால் நிர்மாணிக்கப்பட்ட அம்மாச்சி உணவகம் நாளைய தினம் செம்மணி படுகொலை நாயகி சந்திரிகாவினால் திறக்கப்படவுள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற பிரதேச சபை அமர்வில் நாளை நடைபெற உள்ள நிகழ்விற்கு யாரை அழைப்பது என சுமார் 30 நிமிடங்களாக விவாதிக்கப்பட்டு இறுதியில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரையும் நெடுங்கேணி பிரதேச செயலாளரையும் பிரதம விருந்தினர்களாக அழைப்பது என தீர்மானிக்கப்பட்டு உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் இன்றைய தினம் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட அழைப்பிதழில் முன்னால் ஜனாதிபதி சத்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்காவை பிரதம விருந்தினராக அழைப்பதாக உள்ளது.

அத்தோடு ஆரம்பத்தில் அம்மாச்சி உணவகம் என பிரதேச சபையினால் எமக்கு அறிமுகப்படுத்தப்பட்டாலும் இறுதியில் அதன் பெயர் பலகை வன்னி அறுசுவையகமாக மாற்றப்பட்டுள்ளது.

இதனிடையே வவுனியா வடக்கு பிரதேசசபையின் ஒரு பகுதி உறுப்பினர்கள் சந்திரிகாவினை அழைத்துள்ளமை மற்றும் அம்மாச்சி பெயர் மாற்றப்பட்டமைக்கு  கண்டனம் தெரிவித்துள்ளது.அத்துடன் நாளைய நிகழ்வை புறக்கணிக்கவும் தீர்மானித்துள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

No comments