முரண்பாடுகளிற்கு இடமளிக்கவேண்டாம்!


மன்னார்  திருக்கேதீஸ்வரம் பகுதியில்  கடந்த 3 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தை காரணமாக வைத்து அங்கு தமிழர் என்ற அடையாளத்துடன் அன்னியோன்யமாக வாழ்ந்து வரும்  இந்துக்களுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையில்  முரண்பாடுகளை ஏற்படுத்தும் விதத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் விஷமத்தனமான செயற்பாடுகள் குறித்து மக்கள் விழிப்பாக இருந்து கொள்ளவேண்டுமென வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கோரியுள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்து- கத்தோலிக்க பதற்றத்தை  தூண்டும் வகையில்  சில தீயசக்திகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாக நான் அறிகின்றேன். இதன் ஒரு அங்கமாக மன்னாரில் உள்ள கத்தோலிக் குருமார்கள் மற்றும் மக்களை அச்சுறுத்தும்  வகையில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாக அறிந்து நான் மிகவும் கவலைகொண்டுள்ளேன். 

தமிழ்  மக்களின் உரிமைகளுக்கானபலதசாப்தகாலபோராட்டத்தின் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இந்து- கத்தோலிக்கவேறுபாடு ஏற்பட்டது கிடையாது.  எமது உரிமைகளுக்கான பல்வேறு வடிவங்களிலான போராட்டங்களில் கத்தோலிக்க மக்களும் கத்தோலிக்க மதகுருமார்களும் மகத்தான பங்களிப்பை வழங்கியிருக்கின்றார்கள்.

மனித உரிமைகளைப்பாதுகாப்பதற்கும் எமதுமக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை சர்வதேச சமூகத்துக்கு கொண்டு சென்று நீதிமற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாடுகளை ஏற்படுத்துவதற்கும் அளப்பரிய சேவையை கத்தோலிக்க மதகுருமார்கள் செய்திருப்பது எம் எல்லோருக்கும் தெரியும். குறிப்பாக எனது மதிப்புக்குரிய மன்னார் மாவட்டத்தின் முன்னாள் பேராயர் இராயப்பு யோசப் அவர்கள் உயிர் ஆபத்துக்களையும் பொருட்படுத்தாமல் எமது அரசியல் உரிமைகளை வலியுறுத்தியும், மனித உரிமைகளை பாதுகாப்பதற்குமாக ஆற்றியுள்ள மகத்தான சேவையினை  இந்த சந்தர்ப்பதில் நினைவு கூறுகின்றேன். அதேபோல,தமிழ் மக்களின் உரிமைகளைவென்றெடுப்பதற்கும் மனிதஉரிமைகளைப்பாதுகாப்பதற்குமான பணிகளில் ஈடுபட்டு 12 க்கும் அதிகமான பாதிரியார்கள் தமது உயிர்களை தியாகம் செய்திருக்கிறார்கள். பலர் காணாமல் போயிருக்கின்றார்கள்.

 முள்ளிவாய்காலில் தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு மேற்கொள்ளப்பட்ட போது கத்தோலிக்க மதகுருமார்கள் மக்களின் பாதுகாவலர்களாக செயற்பட்டு தமது உயிர்களை இழந்திருக்கின்றார்கள். அதேபோல,தந்தைசெல்வா எந்தவித மதவேறுபாடுகளும் இல்லாமல் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக இறுதிவரை அயராது உழைத்தார். ஆவரை தமது தலைவனாக ஏற்றுதமிழ் மக்கள் பெரும் ஆதரவை வழங்கினார்கள். பின்னர் தம்பி பிரபாகரன் எமது உரிமைகளுக்காக போராடிய போது எந்தவித மதவேறுபாடுகளும் இன்றி ஒட்டுமொத்ததமிழ் மக்களும் அவர் பின்னே அணிதிரண்டு அளப்பெரும் தியாகங்களைச்செய்தார்கள். 

ஆகவே,எந்த ஒரு காரணத்தையும் முன்னிட்டு தமிழ் மக்கள் மத்தியில் இந்து- கத்தோலிக்க அடிப்படையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் தீயசக்திகளின் செயற்பாடுகளுக்கு இடமளிக்கவேண்டாம் என்று தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். இத்தகைய செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும். எவரது தூண்டுதல்களுக்கும் ஆளாகி எந்த ஒரு முரண்பாட்டு நடவடிக்கைகளிலுந் தயவு செய்துஈடுபடாதீர்களென நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அழைப்புவிடுத்துள்ளார்.

No comments