ஸ்ரீலங்கா சுதந்திரதினத்தை நிராகரிப்போம் ! தமிழ் தேசிய மக்கள் முன்னணி .

ஸ்ரீலங்கா சுதந்திரதினத்தை நிராகரிப்போம்  எனும் தொனிப்பொருளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறைகூவல் விடுத்துள்ளது , இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் ,

சுதந்திரதினத்தை நிராகரிப்போம் சுதந்திரத்திற்காய் அணிதிரள்வோம்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறைகூவல்
18ஆம் நூற்றாண்டில் வெள்ளையர்களால் தமிழ் தேசத்தின் இறைமை முற்றாக பறித்தெடுக்கப்பட்டதால் தமிழ் மக்கள் தம்மைத் தாமே ஆளும் ஆட்சியதிகாரத்தை இழந்து வெள்ளையர்களால் அடிமைப்படுத்தப்பட்டனர்.
இவ்வாறு தமிழ் மக்களிடமிருந்து பறித்தெடுத்த இறைமையையும்; ஆட்சியுதிகாரத்தையும் வெள்ளையர்கள் 1948ஆம் ஆண்டு இலங்கைத் தீவில் பெரும்பான்மையாக காணப்பட்ட பௌத்த பேரினவாதிகளிடம்; சட்டபூர்வமாக கையளித்துவிட்டுச் சென்றனர்.
அன்றிலிந்து இலங்கைத்தீவின் ஆட்சிக்கட்டில் ஏறிய பேரினவாத ஆட்சியாளர்கள் தமிழ் தேசத்தின் இருப்பை இல்லாது அழிக்கும் கட்டமைப்புசார் இனஅழிப்புச் செயற்பாடுகளை தீவிரமாக முன்னெடுத்து வந்துள்ளனர்.
அந்த இனவழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிரான தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட ஜனநாயகப் போராட்டங்கள் வன்முறை வழியில் அடக்கப்பட்டது. அதனால் தமிழர் ஆயுத மேந்திப் போராட நிற்பந்திக்கப்பட்டனர். அந்த ஆயுதப்போராட்டம் இன அழிப்பு ஒன்றின் மூலம் 2009 மே மாதம் அழிக்கப்பட்டுள்ளது.
இன அழிப்பு யுத்தத்தை நியாயப்படுத்துவதற்காக அமுல் படுத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் இன்னமும் நீக்கப்படவில்லை. உலகிலேயே மிக்க கொடிய சட்டமாக உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படல் வேண்டுமென ஐ.நா.மனித உரிமைகள் பேரவையினால் கடந்த 2015ஆம் ஆண்டு தீர்மானம் இயற்றப்பட்டுள்ளபோதும், அதற்கு இலங்கை அரசு இணங்கியுள்ளபோதும் இன்று வரை அந்தச் சட்டம் நீக்கப்படவில்லை.
அச்சட்டத்தின் கீழ் தமிழர்கள் கேட்பாரின்றி கைது செய்யப்படுவதும் சித்திரவதை செய்யப்படுவதும் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது கண்ணீர்போராட்டம் வீதியோரம் 700 நாட்களை தாண்டியும் தொடர்கின்றது.
தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக சிறைகளுக்குள் வாடும் அப்பாவி இளைஞர்களின் விடுதலை கானல் நீராகிக் கொண்டிருக்கின்றது.
இன அழிப்பில் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் குடும்பங்களுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை. கடந்த 28 வருடங்களுக்கு முன்னர் சொந்த ஊரிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கானோர் இன்று வரை தமது வீடுகளுக்கோ, ஊருக்கோ திரும்ப அனுமதிக்கப்படவில்லை. அவர்களது நிலங்கள் தொடர்ந்தும் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ளதுடன், தொல்லியல் திணைக்களத்தினாலும், வன இலாகாவினாலும் மேலும் அபிவிருத்தி என்ற பெயரில் பல அரச திணைக்களங்களாலும் கபளீகரம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ் இளைஞர்களின் வாழ்வை அழிக்கும் வகையில் திட்டமிட்டு போதைப் பழக்கத்திற்கு அடிடையாக்கும் செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் யுத்தம் முடிந்து 10 ஆண்டுகளாகியும் ஸ்ரீலங்கா அரசானது தனது இராணுவ பொலிஸ் அதிகாரங்களையும், ஏனைய அரச அதிகாரங்களையும் பயன்படுத்தி தமிழர்களை அச்சுறுத்தி அவர்கள் மீது சிங்கள பௌத்த மேலாதிக்கவாதத்தை திணிக்கும் முயற்சியிலேயே ஈடுபட்டுள்ளது.
இவை அனைத்துக்கும் முடிவு கட்டப்படல் வேண்டும் என்ற நோக்குடன் கடந்த காலங்களில் தமிழ் மக்கள் ஸ்ரீலங்காவின் சுதந்திரதினத்தை நிராகரித்து கறுப்பு நாளாக பிரகடனப்படுத்தி, கறுப்புக் கொடிகளைகட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்துள்ளனர். கடந்த காலங்களைப் போன்று இவ்வாண்டும் ஸ்ரீலங்காவின் சுதந்திரதினத்தை நிராகரித்து கறுப்பு நாளாக அனுஸ்டிக்குமாறு எமது மக்களை அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திர தினத்தை நிராகரித்து யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்கின்றது.
இப்போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் முகமாக பொது மக்ககளையும் பொது அமைப்புக்களையும் பெருமளவில் அணிதிரண்டு வருமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
செல்வராசா கஜேந்திரன்
பொதுச் செயலாளர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

No comments