11வது வருட நினைவு அனுஸ்டிக்கும் படையினர் குடும்பம்!

வன்னிக் காட்டுப் பகுதிக்குள் ஊடுருவிய சமயத்தில், விடுதலைப்புலிகளின் முறியடிப்பு அணிகளின் தாக்குதலில் மரணமான இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணி (Long Range Reconnaissance Patrol -LRRP) தளபதியான லெப்.கேணல் லலித் ஜெயசிங்கவின் நினைவாக, நேற்று முல்லைத்தீவில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் காட்டு பகுதியில், லலித் ஜெயசிங்க உயிரிழந்த இடத்தில்- அவரது மனைவி, மகள், பெற்றோரால் மரக்கன்றுகள் நடப்பட்டன.

அடர்ந்த காட்டுக்குள், ஜி.பி.எஸ் துணையுடன் சுமார் 2.7 கிலோமீற்றர் தூரம் நடந்து சென்றே, அவர் கொல்லப்பட்ட இடத்தை இந்த குழு அடைந்தது.

மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், 4வது புலனாய்வு படையணி என்பவனவற்றின் வழிகாட்டலில், ஜெயசிங்கவின் அஞ்சலி நிகழ்வு நடந்தது. படைத்தரப்பினர், அவர் உயிரிழந்த இடத்திற்கு வழிகாட்டிச் சென்றனர். சம்பவம் நடந்த இடம், ஆழ ஊடுருவும் படையணியினர் புலிகளின் பகுதிக்கு சென்று தங்கியிருக்கும் தரிப்பிடமாக இருந்ததால், அதன் புவியியல் அமைவிடம் ஜி.பி.எஸ் மூலம் சுலபமாக கணடறியப்பட்டிருந்தது.

அடர்ந்த காட்டுக்குள், ஜெயசிங்க உயிரிழந்த இடத்தில் மௌன அஞ்சலி செலுத்தி, சில மரங்கள் நாட்டப்பட்டுள்ளன.

2008 நவம்பர் மாதத்தில் ஒட்டுசுட்டான் பகுதியில் நடந்த தாக்குதலில் மேஜர் லலித் ஜெயசிங்க உயிரிழந்தார். இராணுவத்தின் விசேட படையணியான ஆழ ஊடுருவும் படையணியின் 3வது ரெஜிமென்ற் கட்டளை தளபதியாக மேஜர் லலித் ஜெயசிங்க செயற்பட்டார்.

ஒட்டுசுட்டானில் 8 பேர் கொண்ட ஆழஊடுருவும் படைணி தாக்குதல் முயற்சி மேற்கொண்டது. புலிகள் நடத்திய முறியடிப்பு தாக்குதலில் அவரும், இன்னொரு சிப்பாயும் காயமடைந்திருந்தனர். காயமடைந்த வர்களை மீட்டு, அடர்ந்த காட்டு பகுதிக்கு ஆழ ஊடுருவும் படையணி தப்பி சென்றது. அடர்ந்த காட்டுக்குள் அவருக்கு சிகிச்சையளித்துக் கொண்டிருந்தபோது, மீண்டும் அந்த அணியை புலிகள் சுற்றிவளைத்து தாக்கினார்கள். இதில் மேஜர் லலித் ஜெயசிங்க உயிரிழந்தார்.

மரணத்தின் பின் லெப்.கேணலாக தரமுயர்த்தப்பட்டார்.

No comments