தனித்து போகத்தயார் என்கிறார் சுமந்திரன்?


தனியாக – தனிநாடாக – பிரிந்துபோவதற்கு எமது மக்களுக்கு உரித்து உண்டு தமிழ் மக்களாகிய நாம் அரசிடம் இல்லாததைக் கேட்கவில்லை. எங்களுக்குரியதைத்தான் கேட்கிறோம். ஆயுத முனையில் நாம் கேட்டதும் எங்களுக்குக் கிடைக்கவேண்டியவையே! இல்லாதவற்றை நாங்கள் கேட்கவில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்ற இளைஞர் மாநாட்டில் சிறப்புரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தத் தமிழ்த் தேசத்துக்கு சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படையிலே சமஸ்டி , இது வடமொழியில்’ இருக்கின்றது. அதற்குத் தமிழ்சொல் கண்டுபிடிப்பது கடினம். கூட்டாட்சி, இணைப்பாட்சி என்றெல்லாம் பொருள்கொள்ளலாம். ஆனால், சுயாட்சி என்றும் சொல்லலாம். சுயமாக எங்களை நாங்களே ஆளுகின்ற ஒரு முறைமை இருக்கவேண்டும். சர்வதேச சட்டம் அப்படியானது. ஒரு நாடாக இருக்கலாம். ஆனால், அந்த நாட்டுக்குள்ளே வெவ்வேறு மக்கள் இருப்பார்களாக இருந்தால் அவர்கள் தங்களைத் தாங்களே சுயமாக ஆளக்கூடிய வகையிலே அர்த்தமுள்ளவகையில் அதைச் செய்வதற்கு – தங்களைத் தாங்களே ஆளுவதற்கான உரித்து இன்றைய சூழ்நிலையில் சர்வதேச சட்டத்தில் இருக்கின்றது. அதைத்தான் நாங்கள் கேட்கின்றோம். இல்லாததைக் கேட்கவில்லை. அநியாயமானதைக் கேட்கவில்லை. அடாத்தாகக் கேட்கவில்லை. ஆயுதமுனையிலே இல்லாததைத் தா என்று கேட்கவில்லை. ஆயுதமுனையில் கேட்டோம். ஆனால், எங்களுக்கு உரியதைத்தான் நாங்கள் கேட்டோம். எங்களுக்குக் கிடைக்கமுடியாததை ஒருபோதும் நாம் கேட்டமை கிடையாது.

அப்படியான ஒரு நாட்டுக்குள்ளே – அப்படியான ஓர் ஆட்சிமுறையை அமைத்துக்கொடுப்பதற்கு அந்த நாடு தவறுமாக இருந்தால் தனியாக – தனிநாடாக – பிரிந்துபோவதற்கு எமது மக்களுக்கு உரித்து உண்டு. என்பதுதான் சர்வதேச சட்டம்.

இன்றைக்கு ஒரு நாட்டுக்குள் வாழ்வதற்கு நாம் தயார் என்று சொல்கின்றோம் அப்படி சொல்வதில் அர்த்தமில்லை. ஒரு நாட்டுக்குள்ளே – சுயாட்சி முறையிலே – இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொள்கையின் அடிப்படையிலே – வேறு எந்தக் கட்சிக்கும் இந்தத் தகுதி கிடையாது. இன்றைக்கு இருக்கின்ற கட்சிகளுக்குள்ளே சுயாட்சி என்ற அடித்தளம் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்துதான் எழுந்தது. அது சர்வதேச சட்டம். எங்களுக்கான உரித்து. அதனைக் கொடுக்கவேண்டும் என்று நாங்கள் கேட்பதன் அர்த்தம் என்னவென்றால்,  அதைக் கொடுக்காவிட்டால் நாங்கள் ஒரு நாட்டுக்குள்ளே வாழ்கின்ற எங்களுடைய இலக்குகளை இழக்கத் தயாராக இருக்கின்றோம் என்றுதான் அர்த்தம்.

இதுவரை காலமும் இலங்கை அரசியல் சட்டம் ஒருசாராரால் மட்டுமே இயற்றப்பட்டது. ஒரு கட்சியினால் மட்டுமே இயற்றப்பட்டது. 1972 ஆம் ஆண்டு குடியரசு அரசியல் சட்டம் சிறிலங்கா சுதந்திரக் கட்சியால் மட்டும் இயற்றப்பட்டது. 1978ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு அரசியல் சட்டம் ஐக்கிய தேசியக் கட்சியால் மட்டும் இயற்றப்பட்டது. மற்ற பெரும் கட்சிக்குக் கூட அதில் இணக்கப்பாடு இருக்கவில்லை. தமிழ் மக்கள் அதில் எழுதப்படவில்லை. ஒரு நாட்டினுடைய அரசியல் அமைப்புச் சட்டம் என்பது ஒரு நாட்டினுடைய சமூக ஒப்பந்தம். அது சாதாரண சட்டங்களைப் போன்றதல்ல. அந்த ஒப்பந்தத்தில் என்ன உள்ளது. நாங்கள் ஒரு நாடாக வாழ இணங்குகின்றோம். ஆனால், இன்ன இன்ன அடிப்படையில்தான் வாழ இணங்குகின்றோம் என்பதுதான் அந்த ஒப்பந்தம். இதுநாள்வரைக்கும் அவ்வாறான ஒப்பந்தங்கள் கிடையா. நாங்கள் இணங்கிய ஒப்பந்தமே கிடையாது.

ஆகவேதான் சிங்கள மக்கள் மத்தியில் நான் சொல்லியிருக்கின்றேன், இதுவரைக்கும் ஒரு நாட்டுக்குள் வாழ்வதற்கான ஒப்பந்தத்தை நாங்கள் உங்களுடன் செய்துகொள்ளவில்லை. அப்படிச் செய்வதற்குத் தயார் என்று நாங்கள் வந்திருக்கின்றோம். இந்தச் சந்தர்ப்பத்தை நீங்கள் இழக்கவேண்டாம் என்று சொன்னேன். ஒருநாட்டுக்குள்ளே வாழ்வதற்கான இணக்கத்தை நாங்கள் எடுப்பதாக இருந்தால் அது சுயநிர்ணய அடிப்படையில் – சுயாட்சித் தத்துவங்களின் அடிப்படையில் – எங்களுக்கான ஆளுகின்ற முறைமைகளை அவர்கள் ஏற்றுக்கொண்டால் மட்டும்தான் நாங்கள் அதற்கு இணங்கிக் கொடுப்போம். அதுதான் எங்களது அரசியல் நிலைப்பாடு. அந்த அரசியல் நிலைப்பாடு நீதியானது, நியாயமானது, சர்வதேச சட்டத்துக்கு இணங்கியது. – என்றார்.

No comments