யாராக இருந்தாலும் மன்னிப்பே கிடையாது

போதைப்பொருள் கடத்தல், சுற்றாடல் அழிவு நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் எவராக இருந்தாலும் அவர்களது பதவி நிலைகளை பார்க்காது சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அநுராதபுரம் சல்காது விளையாட்டரங்கில் நேற்று (14) நடைபெற்ற சுற்றாடல் பாதுகாப்பு செயற்திட்டத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அநுராதபுர மாவட்ட விசேட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சுற்றாடல் பாதுகாப்பின் முக்கியத்துவம் என்பது இன்று ஒரு முக்கிய விடயமாக அறியப்பட்டாலும் இது இன்னும் உரிய முறையில் நடைமுறை ரீதியாக மக்கள் மத்தியில் அமுல்படுத்தப்படவில்லை என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

சுற்றாடல் பாதுகாப்பு செயற்பாடுகள் ஒருபோதும் எவரும் தட்டிக்கழிக்க முடியாத பொறுப்பாகும் என குறிப்பிட்ட ஜனாதிபதி, காலநிலை மாற்றத்தின் காரணமாக உருவாகியிருக்கும் அனர்த்தங்களின் மூலம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு மத்தியில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருப்பதாக புதிய சர்வதேச ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பாரிய சுற்றாடல் அழிவுகளுடன் ஏற்பட்டுள்ள இந்த மோசமான நிலைமை பற்றி அனைத்து மக்களும் முக்கிய கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும் வாழும் உரிமையான சுற்றாடலை பாதுகாப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள சுற்றாடல் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டங்களுடன் தாமதிக்காது அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இன்று பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசங்களுக்கு ஏற்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தல் நாட்டின் சுற்றாடல் அழிவுக்கு முக்கிய காரணமாக உள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, மரம் வெட்டுவதற்காக பயன்படுத்தும் மின்சார வாள்களை பயன்படுத்துவதற்கு அனுமதிப் பத்திரங்களை கட்டாயமாக்கிய முதலாவது அரசாங்கம் என்ற வகையில் அண்மையில் அது பற்றிய தீர்மானத்தை மேற்கொண்டமை சுற்றாடல் பாதுகாப்பை கருத்திற்கொண்டேயாகும் என்றும் குறிப்பிட்டார்.

எதிர்வரும் மார்ச் மாதம் 01ஆம் திகதிக்கு முன்னர் மின்சார வாள்களை வைத்திருப்பவர்கள் அதுபற்றி பொலிஸாருக்கு தெரியப்படுத்தி, பிரதேச செயலகத்தின் ஊடாக அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ள வேண்டியது கட்டாயமானதாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, பொலிஸாரும் கிராமிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து கள அலுவலர்களும் இது பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

No comments